பெட்டாலிங் ஜெயா: மலேசியாவிற்குச் செல்லும் பயணிகள் விலை
உயர்ந்த ஆன்டிஜென் விரைவு பரிசோதனைக்கு பணம் செலுத்த வேண்டியது குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதிலும் வெளிநாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், ஏற்கெனவே கிருமித்தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனை செய்துகொண்ட பிறகும் இந்த சோதனை தேவையா என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர், இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் இச்சோதனையை நிறுத்திவிட்ட அல்லது அதை நிறுத்துவது குறித்து பரிசீலித்து வரும் வேளையில், இப்பரிசோதனைக்கான தேவை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
"இப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பரிசோதனை செய்திருக்கும் நிலையில் மீண்டும் பரிசோதனை ஏன் தேவை," என்று கேட்டார் இந்தோனீசியாவில் இருந்து மலேசியா சென்ற மலேசியரான சின்டி ஃபூ.
சிங்கப்பூரில் இருந்து சென்ற முகமது ஹமிது, "பரிசோதனை நடைமுறை நீக்கப்பட்டால், பயணம் மிகவும் எளிதாக இருக்கும்," என்றார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில், ஏஆர்டி பரிசோதனைக்காக மலேசியர்கள் 100 ரிங்கிட்டும் (32 வெள்ளி) வெளிநாட்டினர் 160 ரிங்கிட்டும் செலுத்தவேண்டும்.
சாதாரணமாக மருத்துவமனைகளில் இப்பரிசோதனைக்கு
60 முதல் 70 ரிங்கிட் செலவாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜோகூரில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தங்கு விடுதிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, அங்கு பொருளாதாரம் மீட்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஊழியர் பற்றாக்குறை காரணமாக பொருளாதார மீட்சி மந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, மலேசியாவில் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இன்னும் ஓரிரு மாதத்தில் ஓமிக்ரான் XE திரிபு பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக மலேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மலினா ஒஸ்மான் கூறியுள்ளார்.