பெய்ஜிங்: நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 25,701 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து தற்போது ஆக அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களை சீனா எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டில் நடப்பில் இருக்கும் முடக்கநிலையால் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் சுகாதாரப் பராமரிப்புத் துறையும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 23,600 சம்பவங்கள் ஷாங்காய் நகரில் பதிவானவை. இந்த எண்ணிக்கை, இந்நகரம் தினசரி சராசரியில் இதுவரை எதிர்கொண்டதில் ஆக அதிகம்.
இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பலருக்கு கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டதாக ஷாங்காய் அறிவித்தது. குவாங்சூ நகரில் வாழும் 18 மில்லியன் மக்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
ஷாங்காயில் ஒரு வாரத்திற்குக் கிருமித்தொற்று ஏற்படாேதார் வசிக்கும் பகுதிகளில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது. எனினும், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஒரு வாரத்திற்குக் கிருமித்தொற்று ஏற்படாத பகுதிகளில் வசிப்போர் வெளியே செல்லலாம். எனினும், அவர்கள் அந்த வட்டாரத்தைவிட்டு வெளியேறக்கூடாது.
இரண்டு வாரங்களுக்கு யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படாத பகுதிகளில் வசிப்போர் நடமாடுவதற்குக் கூடுதல் நீக்குப்போக்கு உண்டு.
கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் ஒழிக்கும் எண்ணம் கொண்ட ஓரிரு உலக நாடுகளில் சீனாவும் ஒன்று. முடக்கநிலையை அறிவித்து கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அனைவரையும் தனிமைப்படுத்தும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.