நியூயார்க்: அமெரிக்காவின் 'சிடிசி' எனும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள நாடுகளுக்கான பட்டியலிலிருந்து எல்லா நாடுகளையும் விலக்கியுள்ளது.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த ஈராண்டுகளாகப் பல நாடுகள் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தன.
புதிய மாற்றத்தின்கீழ் கிருமிப் பரவல் நிலவரம் இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் ஆக உயரிய எச்சரிக்கையான நான்காம் நிலை எச்சரிக்கையை விடுக்கும். சுகாதாரக் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் அளவிற்கு கிருமிப் பரவல் மோசமாக இருக்கும் நாடுகள், அளவுக்கு அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களை எதிர்நோக்கும் நாடுகள் போன்றவற்றுக்கு மட்டுமே நான்காம் நிலை எச்சரிக்கை பொருந்தும்.
முன்னதாக ஒரு நாட்டில் பதிவாகும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைக் கருத்தில்கொண்டு அதை பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், அனைத்துலக விமானங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தும் விதிமுறையைத் தளர்த்துமாறும் அமெரிக்க பயணச் சங்கமும் விமான நிறுவனங்களும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கொள்ளைநோய்ப் பரவலின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட விமானச் சேவைகள் மீண்டுவர உதவ இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும்போது பயணிகள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. இது, அமெரிக்காவில் உள்நாட்டு விமானச் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டில் பல பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். கிருமித்தொற்றுக்கு எதிராக இருக்கும் பாதுகாப்பு குறைவதை எண்ணி வேறு சிலர் வருத்தமும் தெரிவித்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் விமான நிலையங்கள், டாக்சி, பேருந்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை முகக்கவச நிபந்தனைகளை நீக்கின.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் மேல்முறையீடு செய்யக்கூடும். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அவசியம் என்று பொது சுகாதார அதிகாரிகள் கருத்துரைத்தால் மேல்முறையீடு செய்யப்படும் என்று அதிபர் பைடனின் அரசாங்கம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தும் விதிமுறைகள் சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளன.