ஐந்தாண்டுகளுக்கு முன்பு தான் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு ஆளானது தெரிந்த பிறகு 76 வயது மைக்கல் பாங் மேசைப்பந்து விளையாட ஆரம்பித்தார். அதேபோல் இந்நோய்க்கு ஆளான 68 வயது யோங் லெக் கியோங் தினமும் இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நடந்து இறுக்கமான தசைகள் தேற உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.
50 வயதைத் தாண்டிய ஒவ்வோர் 1,000 சிங்கப்பூரர்களிலும் மூவர் பார்க்கின்சஸ் நோய்க்கு ஆளாகின்றனர். பார்க்கின்சன்ஸ், அளவுக்கு அதிகமாக இறுக்கிக்கொள்ளும் தசைகள், தசை அதிர்வுகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய மூளைக் குறைபாடு. விழாமல் பார்த்துக்கொள்ளும் உடலின் ஆற்றல், சீரான பேச்சு போன்றவற்றிலும் பாதிக்கப்பட்டோர் சிக்கல்களை எதிர்நோக்கலாம்.
பார்க்கின்சன்ஸ் நோய்க்கு சிகிச்சையோ மருந்தோ கிடையாது. ஆனால் அடிக்கடி உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருப்பது, அசைவுகளைச் சீராக வைத்திருக்க 'ஃபிசியோதெரப்பி' நடவடிக்கையை மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் அதைக் கையாள முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரின் சமூகம் தொடர்ந்து மூப்படையும்போது பார்க்கின்சன்ஸ் நோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அலெக்சாண்டிரா மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் டான் சி சியேன்னும் முதியோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பிரீத்தா வேணுகோபாலன் மேனனும் தெரிவித்தனர். சில பார்க்கின்சன்ஸ் நோயாளிகள் நுகரும் ஆற்றலை இழப்பதுண்டு. திரு பாங் அத்தகையோரில் ஒருவர்.
சிலர் விழாமல் உடலை நிலையாக வைத்திருக்க சிரமப்படுவர். திரு யோங்கிற்கு இந்தப் பிரச்சினை உண்டு.
நோய்க்கு ஆளாகி மூன்றிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் சிலருக்கு சக்கர நாற்காலியில் நடமாடும் நிலை ஏற்படலாம், சிலர் படுத்த படுக்கையாகவும் ஆகலாம். வேறு சிலருக்கோ உடல்நிலை 10லிருந்து 20 ஆண்டுகளுக்குள் மோசமடையும். உடல் ரீதியான பிரச்சினைகள் மட்டுமின்றி தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற சவால்களையும் சிலர் எதிர்நோக்கக்கூடும்.
இப்படிப்பட்ட நோய்க்கு ஆளான பிறகும் மனந்தளராமல் வாரந்தோறும் ஐந்து முறை குடும்பத்தாருடன் மேசைப்பந்து விளையாடுகிறார் திரு பாங்.
"பார்க்கின்சன்ஸ் நோய்க்கு ஆளானால் தேவைப்படும்போது உடலை அசைப்பது மெதுவடையும் என்றும் அடிக்கடி விழ நேரிடும் என்றும் எனக்குத் தெரியும். உடல் அசைவுகளைச் சீராக்கவும் விழாமல் பார்த்துக்கொள்ளவும் மேசைப்பந்து உதவும்," என்றார் முன்னாள் ஆய்வுக்கூட தொழில்நுட்பரான திரு பாங். நீரில் உடற்பயிற்சி செய்யும்போது விழுவதற்கான சாத்தியம் குறைவு. அதனால் திரு பாங் நீச்சலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் 'ஃபிசியோதெரபி' வகுப்புகளுக்கும் செல்கிறார்.
ஓய்வுபெற்ற பொறியாளரான திரு யோங் அடிக்கடி விழக்கூடிய அபாயத்தை எதிர்கொள்பவர். இவரைக் கவனித்துக்கொள்ள இவரின் மனைவியான 59 வயது ஓவ் செளட் போ தனது வேலையை விட நேரிட்டது. தனது 61வது வயதில் திரு யோங்கிற்குத் தான் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு ஆளானது தெரியவந்தது.
"உடலை ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடுத்திக்கொண்டே இருந்தால்தான் சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படாது அல்லது படுத்த படுக்கையாகும் நிலை வராது என்பது அனுபவத்தில் நாங்கள் கற்றுக்கொண்டது," என்று திருவாட்டி ஓவ் குறிப்பிட்டார்.
திரு யோங்கும் 'ஃபிசியோதெரபி' வகுப்புகளுக்குச் செல்கிறார்.