கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கு மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய மலேசியாவின் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் ஆவலாக இருக்கின்றனர். எனினும், அவர்களுக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான தடை அடுத்த மாதம் விலக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் சில பண்ணைகளுக்குக் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
ஆனால், இம்மாதம் தொடக்கத்திலிருந்து அனுமதிக்கு விண்ணப்பம் செய்த பல பண்ணை உரிமையாளர்களுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி எப்போது கிடைக்கும் என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரியவில்லை.
"அனுமதிக்கு விண்ணப்பிக்க எங்களுக்கு ஒரு நாள்கூட ஆவதில்லை. ஆனால், அதற்குப் பிறகு அது கிடைக்க நீண்ட காலம் ஆகிறது," என்று சிலாங்கூர் கோழிப் பண்ணைச் சங்கத்தின் தலைவரான இட்ரஸ் ஸைனல் அபிடின் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதியன்று மலேசியாவில் கோழி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம் தடை விலக்கப்படும் என்று சென்ற மாதம் 29ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
மலேசியாவின் வேளாண், உணவுத் துறைகள் அமைச்சின்கீழ் உள்ள விலங்குநலப் பிரிவுதான் அனுமதி விண்ணப்பங்களைக் கையாள்வதாகத் திரு இட்ரஸ் தெரிவித்தார். எனினும், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் ஒப்புதலுக்காக அப்பிரிவு காத்திருக்கவேண்டியதாக அதன் அதிகாரிகள் கூறியதை அவர் குறிப்பிட்டார். இதனால் சிலாங்கூர் மாநிலத்தில் பண்ணை உரிமையாளர்கள் குறைந்த விலையில் கோழி இறைச்சியை விற்கவேண்டிய சூழலும் உருவாகியுள்ளதாக அவர் சொன்னார்.
தடை விதிக்கப்பட்டதற்கு முன்பு மலேசியா மாதந்தோறும் 3.6 மில்லியன் கோழிகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து வந்தது.