துபாய்: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் துபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் புறப்பட்ட விமானம், 13 மணி நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் துபாயிலேயே தரையிறங்கியது.
இகே448 என்ற அந்த எமிரேட்ஸ் விமானம், துபாய் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளம்பியது. கிட்டத்தட்ட 4,500 மைல் தொலைவு பறந்தபின் மீண்டும் துபாய்க்கே விமானத்தைத் திருப்பிய அதன் விமானி, நள்ளிரவில் துபாயில் தரையிறக்கினார்.
கடுமையான வெள்ளம் சூழ்ந்ததால் ஆக்லாந்து விமான நிலையம் மூடப்பட்டதே இதற்குக் காரணம்.
“ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரை எந்த அனைத்துலக விமானமும் ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்காது,” என்று அந்த விமான நிலையம் அறிவித்திருந்தது.
அதேபோல, 29ஆம் தேதி காலை 5 மணிவரை அங்கிருந்து எந்தவோர் அனைத்துலக விமானமும் புறப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இடைவிடாத மழையால் அவ்விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டதால் பயணிகள் அவதியுற நேர்ந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் காட்டின.