சிங்கப்பூரில் இருந்து 100,000 ரிங்கிட் (28,940 சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான அரிசியை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஜோகூர் பாருவில் உள்ள பாங்குனான் சுல்தான் இஸ்கந்தரின் சுங்க, குடிவரவு, தனிமைப்படுத்தப்படும் வளாகத்தில் (சிஐக்யூ) தடுத்து வைக்கப்பட்டது.
அந்த வளாகத்தின் சரக்கு பாதையில் 30 வயது நிரம்பிய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக மலேசிய தனிமைப்படுத்தல், பரிசோதனை சேவைப் பிரிவின் ஜோகூர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“20 பெரிய சாக்குகளில் இருந்த 18 டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை,” என்று அந்தப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் அரிசி கைப்பற்றப்பட்டதாக அது கூறியது.
அரிசி மூட்டைகள் வெவ்வேறு பொருள்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
நெல், அரிசி ஒழுங்குமுறை பிரிவுக்கு அந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
மலேசியாவுக்குள் கொண்டுவரப்படும் வேளாண் பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமலாக்கத்தை மேற்கொள்வதில் மலேசிய தனிமைப்படுத்தல், பரிசோதனை சேவைப் பிரிவு உறுதியளித்திருப்பதாக அது கூறியது.
“மலேசியாவின் உயிர் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த மற்ற அமலாக்க முகவைகள், துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.