நோம்பென்: கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்து பதவிலியிருந்து விலகும் கம்போடியத் தலைவர் ஹுன் சென், தமது நாட்டின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளார்.
அதில் தமது மூத்த மகன், இளைய மகன், உறவினர்கள் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.
திரு ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி, ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் 125 இடங்களில் 120 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதால், அக்கட்சி பெற்றுள்ள வெற்றி பெரிதும் குறைகூறப்பட்டது.
மாபெரும் வெற்றிக்குப் பிறகு, உலகில் அதிக காலம் பதவியிலிருக்கும் தலைவர்களில் ஒருவரான ஹுன் சென், தாம் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தமது மூத்த மதன் ஹுன் மானெட் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என அறிவித்தார்.
கம்போடிய மன்னர் திங்கட்கிழமையன்று நான்கு நட்சத்திர ராணுவ ஜெனரலான ஹுன் மானெட்டை நாட்டின் அடுத்த தலைவராக அறிவித்தார். புதிய பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹுன் சென் முன்னதாகத் தெரிவித்தார்
அரசாங்கத்திலிருந்து விலகும் அமைச்சர்களையும் அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களையும் கட்சித் தலைமையகத்தில் வியாழக்கிழமை சந்தித்த திரு ஹுன் சென், அங்கு அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமது டெலிகிராம் ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் திரு ஹுன் மானெட்டும் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள 30 பேரும் இருந்தனர்.
திரு ஹுன் சென்னின் ஆக இளைய மகன் ஹுன் மனி, அரசாங்க சேவை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னைய அமைச்சரவையில் உள்துறை மற்றும் தற்காப்பு அமைச்சர்களாக இருந்தவர்களின் மகன்கள், தந்தையரின் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
பலம் பொருந்திய தற்போதைய தேசிய காவல்துறைத் தலைவராக உள்ள திரு ஹுன் சென்னின் உறவினரான திரு நெத் சவோன், துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பதவியிலிருந்து விலகியவுடன் திரு ஹுன் சென், 2024ல் செனட் சபையின் தலைவராகப் பொறுப்பேற்பார். மேலும், கம்போடிய மன்னர் நாட்டில் இல்லாதபோது, அவர் இடைக்கால மன்னராகவும் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.