சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீனத் தூதரகம் மீது மோதிய வாகன ஓட்டுநரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட வாகனம் சீனத் தூதரக வளாகத்தின் வரவேற்புப் பகுதிக்குள் நுழைந்து மோதியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாகன ஓட்டுநரின் அடையாளம், சம்பவத்துக்குப் பின்னால் உள்ள காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை என்றும் காவல்துறை சொன்னது. வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
சம்பவம் நிகழ்ந்தபோது தூதரகக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பதும் தெரியவில்லை என்று சான் ஃபிரான்சிஸ்கோ காவல்துறைப் பேச்சாளரான சார்ஜண்ட் கேத்ரின் வின்டர்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அரசாங்கத் தரப்பு அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்கத் தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தூதரகம் சொன்னது.