2030ஆம் ஆண்டிலிருந்து மின்சாரத்தை முறையாக, சிக்கனமானப் பயன்படுத்தினால் ஏறக்குறைய 437 பில்லியன் யுஎஸ் டாலரை (S$599 பில்லியன்) உலக தொழில்துறை சேமிக்க முடியும் என்றும் பெரிய அளவில் கரிமக் கழிவைக் குறைக்க முடியும் என்றும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
எரிசக்தி ஆற்றல் இயக்கம் (இஇஎம்), அந்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளளது.
உலகின் ஒட்டுமொத்த தொழில்துறையை இந்த அமைப்பு பிரதிநிதிக்கிறது. சுவிட்சர்லாந்தின் ஏபிபி, ஜெர்மனியின் டிஎச்எல் குழுமம், சுவீடனின் ஆல்ஃபா லாவல், மைக்ரோசாஃப் உட்பட பிரபல நிறுவனங்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளன.
நிறுவனங்கள் தங்களின் எரிசக்தியை ஆற்றலுடன் பயன்படுத்தும் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கினால் நான்கு கிகா டன் கரிம வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் குறைக்க முடியும்.
இது, உலகின் சாலைகளில் உள்ள வாகனங்கள் வெளியிடும் கரிமக்கழிவில் 60 விழுக்காடு என்று அறிக்கையை சுட்டிக்காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
நிறுவனங்கள் எரிசக்தியை கணக்கிட்டுச் செலவிட வேண்டும். அதிக மின்சாரத்தை சேமிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மின்சக்தி சேமிப்பு முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது.
‘காப்28’ மாநாடு விரைவில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் நாம் எதிர்நோக்கும் உலக வெப்பமடைதல் பிரச்சினைக்கு ஆக்ககரமான தொழில்நுட்பத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று ஏபிபி நிர்வாகக் குழு உறுப்பினர் டாரக் மேத்தா வலியுறுத்தினார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் ‘காப்28’ பருவநிலை மாநாடு நடைபெறுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஓரளவு எரிசக்தி சேமிப்புக்கு உதவும். ஆனால் 2050ஆம் ஆண்டுவாக்கில் முற்றிலும் கரிம வெளியேற்றம் இல்லாத நிலையை நோக்கி நாம் நகர்வது முக்கியம்.
சிமெண்ட் தயாரிப்பாளர்கள், உலோக, ரசாயன நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்துறையில் அதிக மாசு ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அவற்றுக்கு கரிமக் கழிவு இல்லாத நடைமுறைகள் செலவுமிக்கதாக உள்ளது.
கடந்த வாரம், அமெரிக்காவின் இஐஏ எனும் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம், உலகளாவிய எரிசக்தி பயனீடு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உட்பட புதைப்படிவம் அல்லாத எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட வளங்கள் 2050ஆம் ஆண்டு வரை அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய உதவும். ஆனால் இந்த வளர்ச்சி உலக வெப்பமடைதல் தொடர்பான கரிம வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் இருக்காது என்று அறிக்கை தெரிவித்தது.