சோல்: இயந்திர மனிதனால் ஊழியர் ஒருவர் நசுக்கப்பட்டு இறந்துள்ளார். மனிதரையும் பெட்டியையும் அது வேறுபடுத்தத் தவறியதால் 40 வயதான அந்த ஊழியர் உயிரிழந்தார் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.
இயந்திர மனித நிறுவனம் ஒன்றின் ஊழியரான அவர், அவற்றைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
குடமிளகாய் நிரப்பப்பட்ட பெட்டிகளைத் தூக்கி நகர் தட்டில் (கன்வேயர் பெல்ட்) வைத்துக்கொண்டிருந்த அந்த ரோபோ, செயலிழந்து அந்த ஊழியரையும் ஒரு பெட்டி என்று அடையாளம் கண்டுள்ளது.
அதன் கை, ஆடவரை நகர் தட்டில் தள்ளி நசுக்கியது. அதில் அவருக்கு முகம், மார்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.