மாஸ்கோ: ரஷ்யாவில் வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் ஐந்து நாள்களுக்குள் தங்களுடைய கடப்பிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்று டிசம்பர் 11ஆம் தேதி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய ரஷ்ய சட்டத்தின்படி கட்டாய ராணுவச் சேவையில் ஈடுபடுவோர், மத்திய பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், குற்றவாளிகள், மாநில ரகசியங்கள் அல்லது ‘சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை’ கையாளக்கூடிய நபர்கள் மீது அதிகாரிகள் பயணத் தடை விதிக்கலாம்.
உள்துறை அல்லது வெளியுறவு அமைச்சுகளிடம் ஒப்படைக்கப்பட்ட கடப்பிதழ்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.
பயணத் தடை விலக்கப்பட்டதும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்த பிறகு அவை திருப்பியளிக்கப்படும்.
கட்டாய ராணுவச் சேவை அல்லது பொதுச் சேவையை முன்னிட்டு பயண உரிமைகளுக்கு தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள், ராணுவச் சேவையை முடித்ததற்கான ராணுவ அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று புதிய உத்தரவு தெரிவிக்கிறது.
மார்ச் மாதத்தில் பெயர் குறிப்பிடப்படாத, தகவலறிந்த தரப்பினரை மேற்கோள்காட்டி ஃபினான்ஷியல் டைம்ஸ், மூத்த அதிகாரிகள் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்காக அவர்களுடைய கடப்பிதழ்களை ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினர் பறிமுதல் செய்வதாகத் தகவல் வெளியிட்டிருந்தது.