சோல்: வடகொரியா சுமார் 200 பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து தென்கொரியாவின் இயோன்பியோங் தீவில் வசிப்போருக்கு வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வெள்ளிக்கிழமையன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென்கொரிய தற்காப்பு அமைச்சு இத்தகவலை வெளியிட்டது. “இயோன்பியோங் தீவுக்கு அருகே வடகொரியா சுமார் 200 குண்டுகளைப் பாய்ச்சியது,” என்று தென்கொரியா தற்காப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அத்தீவில் வசிப்போர் கேட்டுக்கொள்ளப்பட்டாக இயோன்பியோங் அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
தென்கொரிய-வடகொரிய எல்லைக்கு அருகே உள்ள கடற்பகுதியில் தென்கொரிய ராணுவம் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாக அப்பகுதிவாசிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடகொரியா பாய்ச்சிய குண்டுகளால் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
வடகொரியா ராணுவ ரீதியாக மிரட்டல் விடுத்ததற்கான அறிகுறிகள் தலைதூக்கியதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வெளியேறுமாறு இயோன்பியோங் வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதென யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.02 மணிக்கும் 12.30 மணிக்கும் பாதுகாப்புக் கூடாரங்களுக்குச் செல்லுமாறு அத்தீவின் மேற்குப் பகுதியில் வசிப்போருக்குார் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.
2010ஆம் அண்டில் இயோன்பியோங் தீவின்மீது வடகொரியா பலமுறை பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியது. அதில் பொதுமக்களில் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.
அது, 1953ஆம் ஆண்டு நடந்த கொரியப் போருக்குப் பிறகு வடகொரியா, தென்கொரியமீது நடத்திய ஆக மோசமானத் தாக்குதல்களில் ஒன்றாகும்.