ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தற்காப்பு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் அணுக்கமான ஒத்துழைப்பு தமது கட்சியின் முன்னுரிமை என்றார் அவர். ஃபோர்ஸா இத்தாலியா கட்சிக்கு அவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்.
“உலகில் அமைதியை நிலைநாட்ட விரும்பினால் அதற்கு ஐரோப்பிய ராணுவம் கட்டாயம் தேவை. செயல்திறனுள்ள ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கான முதற்கட்ட அடிப்படைத் தேவை இது,” என்று அமைச்சர் கூறினார்.
அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் நிறைந்திருக்கும் உலகில், மத்திய கிழக்கு முதல் இந்தோ-பசிபிக் வரை நெருக்கடிகள் நிலவும் வேளையில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகளின் குடிமக்களைக் காப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளால் மட்டுமே முடியும் என்றார் அவர்.
ஈராண்டுக்குமுன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததிலிருந்து, ஐரோப்பியத் தற்காப்பு ஒத்துழைப்பு அதிகம் வலியுறுத்தப்படுகிறது.