லண்டன்: ஐரோப்பாவில் இந்த ஆண்டு முற்பாதியில் நடைபெறவிருக்கும் பெரிய அளவிலான பயிற்சிக்கு 20,000 ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டன் கடப்பாடு தெரிவித்துள்ளது.
போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பவும் அரசாங்கம் உறுதி கூறியிருப்பதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு கூறியது.
பிரிட்டிஷ் ராணுவத்தின் 16,000 துருப்பினர், பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை, கிழக்கு ஐரோப்பாவில் தங்கியிருப்பர் என்றும் விமானந்தாங்கிக் கப்பல், எஃப்35பி ரகப் போர் விமானம், சுற்றுக்காவல் விமானங்கள் ஆகியவையும் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
நேட்டோ கூட்டணியின் 75ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தப் பயிற்சி இடம்பெறவிருக்கிறது.
“இந்தப் பயிற்சியில், நேட்டோ கூட்டணியில் இடம்பெற்றுள்ள 30 நாடுகளுடன் ஸ்வீடன் ராணுவத்தினரும் இணைந்து கூட்டாகப் பயிற்சி மேற்கொள்வர். புட்டினின் அச்சுறுத்தலுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கை இது,” என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கிராண்ட் ஷேப்ஸ் கூறினார்.
சென்ற வாரம் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், அடுத்த நிதியாண்டில் உக்ரேனுக்கான நிதியாதரவை 2.5 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கு ($3.19 பில்லியன்) உயர்த்துவதாக அறிவித்தார்.