காபூல்: ரஷ்ய விமானம் ஒன்று ஆறு பேருடன் ஆப்கானிஸ்தான் வான்வெளியில் சனிக்கிழமை பறந்து கொண்டிருந்த நிலையில், அது ரேடார் ஒளித்திரையில் இருந்து மறைந்துவிட்டதாக ரஷ்ய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) அன்று தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் காவல் துறையினர் ஜனவரி 21ஆம் தேதி விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகக் கூறும் நிலையில் ரஷ்ய அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்னர்.
இது குறித்து பேசிய ரஷ்ய ஆகாயத் துறை அதிகாரிகள், அந்த விமானம் மருத்துவ தனிப் பயன்பாட்டுக்காக இந்தியாவில் இருந்து கிளம்பியதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தனர்.
அந்த விமானம் உஸ்பெக்கிஸ்தான் வழியாக மாஸ்கோ செல்ல இருந்ததாகவும் அது பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான டஸ்ஸால்ட் ஃபால்கன் 10 ரக விமானம் என்றும் அறிக்கை விளக்கியது. அந்த விமானம் 1978ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பதாக்ஷான் மாநிலத்தில் விமான விபத்து நடந்ததாக தகவல் கிடைத்தது என்று அந்த மாநில காவல் துறை பேச்சாளர் ஞாயிறு அன்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், அந்த விமானம் வழக்கமான வர்த்தக ரீதியிலான விமானப் பயணம் அல்ல என்றும் இதன் தொடர்பில் கூடுதல் தகவல்களை தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் விளக்கியது.
ஆப்கானிஸ்தானின் பதாக்ஷான் மாநிலத்தில் ஒதுக்குப்புறமான மலைப்பகுதியில் இரவு நேரத்தில் இந்த விமான விபத்து நிகழ்ந்ததாக அம்மாநில காவல் துறை அதிகாரி தனது அறிக்கையில் கூறியுள்ளளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.