பெட்டாலிங் ஜெயா: வீட்டில் மூண்ட தீக்கு ஆறு பிள்ளைகள் இரையாகி இருக்கக்கூடும்.
டாமான்சாரா டாமாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நெருப்பு மூண்டுள்ளதாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று காலை 11.15 மணியளவில் தகவல் கிடைத்து தீயணைப்பு, மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர்.
பூட்டிய வீட்டில் 2 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பிள்ளைகள் இருந்தனர்.
கதவின் இரும்புக் கம்பியை வெட்டிய பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர்.
அங்கே, நான்கு பெண் பிள்ளைகளும் இரட்டையர் ஆண் பிள்ளைகளும் இருந்தனர்.
இந்நிலையில் வீட்டின் சோஃபா தீப்பிடித்துக்கொண்டது என்றும் கட்டட அமைப்புக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதய நோய் சிகிச்சைக்காக பிள்ளைகளின் தந்தையை அவர்களின் தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பிள்ளைகள் வீட்டில் தனியே விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பாக உள்ள ஆறு பிள்ளைகளும் தங்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.