லாஸ் ஏஞ்சலிஸ்: மனிதர்களைப் பாதிக்கும் அரிய வகை புபோனிக் கிருமித்தொற்றால் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் வளர்க்கும் பூனையிடமிருந்து அவருக்கு அந்த நோய் பரவியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்த நோய் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை அழித்தது.
தற்போது அந்த நோயால் பாதிக்கப்பட்டோரைக் குணப்படுத்த முடியும் என்றபோதிலும் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புபோனிக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் பெயரை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் அவரது பூனைக்கும் நோய் ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக டெஷுட்ஸ் கவுன்ட்டியின் சுகாதார அதிகாரியான டாக்டர் ரிச்சர்ட் ஃபாவ்செட் தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஒரிகன் மாநிலத்தில் ஆகக் கடைசியாக 2015ஆம் ஆண்டில் புபோனிக் கிருமித்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.