ஆஸ்திரேலிய எழுத்தாளரின் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் போகலாம்: சீனா

ஆஸ்திரேலிய எழுத்தாளரின் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் போகலாம்: சீனா

1 mins read
d988c2f3-973f-407d-a747-cb0761935c7e
வேவு பார்த்த குற்றத்திற்காக முன்னாள் வலைத்தள எழுத்தாளர் யாங் ஹெங்ஜுன்னுக்கு பெய்ஜிங் நீதிமன்றம், நிபந்தனை அடிபடையிலான மரண தண்டனையை விதித்தது.   - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: சிறையிலடைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுன்னுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் போகக்கூடும் என்று ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர் திங்கட்கிழமை (மார்ச் 11) கூறியுள்ளார்.

ஜனநாயக ஆதரவு முன்னாள் வலைத்தள ஆசிரியரான அந்த எழுத்தாளர் மேலும் குற்றம் ஏதும் புரியாமலிருப்பது கட்டாயம் என்று தூதர் சியாவ் சியான் கூறினார்.

ஆஸ்திரேலிய நிதி மறுஆய்வு வர்த்தக உச்சநிலை மாநாட்டில் தூதர் இதைத் தெரிவித்தார்.

முன்னதாக, வேவு பார்த்த குற்றத்திற்காக பெய்ஜிங் நீதிமன்றம் அந்த எழுத்தாளருக்கு நிபந்தனை அடிபடையிலான மரண தண்டனையை விதித்தது.

எழுத்தாளர் யாங்கிற்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று தூதர் கூறினார்.

யாங் அவரது சிறைத்தண்டனை தொடர்பான நிபந்தனைகளைச் சரிவர நிறைவேற்றி, மேலும் குற்றங்கள் ஏதும் புரியாவிட்டால், கோட்பாட்டளவில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படாமலே போக இடமிருக்கிறது என்றார் அவர்.

சீன அதிகாரி ஒருவர் எழுத்தாளர் யாங்கின் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்துக் கருத்துரைத்திருப்பது இதுவே முதல்முறை.

எழுத்தாளரின் உடல்நிலை மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறமுடியாது என்றபோதும் அவரது குடும்பத்தினர் கூறுவதுபோல மிக மோசமாக இல்லை என்றும் தூதர் சியாவ் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற எழுத்தாளர் யாங், சீனாவில் பிறந்தவர். நியூயார்க்கில் பணிபுரிந்த அவர், 2019ல் குவாங்ஸோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்