சொன்னதைச் சொல்லுமாம் கிளைப்பிள்ளை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம்.
மனிதர்களின் மொழியைப் பேசாவிட்டாலும் சில பறவைகள் கேட்கும் ஒலியை அப்படியே திருப்பி எழுப்பும் திறன் பெற்றுள்ளன.
அப்படி ஒரு குறும்புக்காரப் பறவை அண்மையில் பிரிட்டனில் உள்ள காவல்துறை அதிகாரிகளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.
‘ஸ்டார்லிங்’ எனப்படும் அந்த மைனா வகைப் பறவை காவல்துறை வாகனத்தின் ‘சைரன்’ எச்சரிக்கை ஒலியைப் போன்றே சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் தேம்ஸ் வேலி பிரிவு காவல்துறை அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் ஏதோ கோளாறு என்று சிறிது நேரம் குழம்ப நேரிட்டது. அந்த அளவிற்கு அது துல்லியமாக ஒலி எழுப்பியதாக பிபிசி தெரிவித்தது.
தேம்ஸ் வேலி காவல்துறை, இதுதொடர்பான காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
தங்கள் அதிகாரிகளுக்கான பயிலரங்குகளைக் கவனித்து அந்த மைனா அவ்வாறு செய்வதாக அது குறிப்பிட்டுள்ளது.
‘ஸ்டார்லிங்’ பறவைகள் போலியாகக் குரலெழுப்புவதில் வல்லவை என்று கூறப்படுகிறது. பிற பறவைகளின் குரலொலி மட்டுமன்றி இயந்திரங்களின் சத்தம், மோட்டார் சைக்கிள் ஒலி போன்றவற்றையும் கவனித்து அவை துல்லியமாக அதேபோன்ற ஒலியை எழுப்புவதுண்டு.