மட்ரிட்: மருத்துவப் பயன்பாட்டுக்கான கஞ்சா செடிகள் தொடர்பில் 645 மில்லியன் யூரோக்களை (S$686.41 மி.), 35 நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மோசடிவழி பறித்ததாகக் கூறப்படும் கும்பலை ஸ்பெயின் தலைமையிலான காவல்படைகள் கைதுசெய்துள்ளன.
வர்த்தகக் கட்டமைப்பு ஒன்றை இந்தக் கும்பல் நிறுவி, அனைத்துலக கஞ்சா சந்தைகளுக்குச் சென்று அங்குள்ளோரை இந்தக் கட்டமைப்பில் முதலீடு செய்ய வைத்ததாக நம்பப்படுகிறது என்று ஸ்பெயின் தேசிய காவல்படை அறிக்கை வெளியிட்டது.
ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி, லாட்வியா, போலந்து, இத்தாலி, டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது சந்தேக நபர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி மோசடி தொடர்பாகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
“இந்தக் கும்பல் விளம்பரப்படுத்திய வர்த்தகக் கட்டமைப்பில் முதலீட்டாளர்களின் மூலதனம், பங்காளித்துவங்களை உருவாக்கி கஞ்சா செடிகளைப் பயிரிடுவதற்கான நிதியளிப்புக்கு மாற்றப்பட்டது,” என்றார் ஸ்பானிய காவல்துறைப் பேச்சாளர்.
இந்தக் கட்டமைப்பின் மூலம் எந்த வகை கஞ்சாவில் முதலீடு செய்கிறார்களோ அதைப் பொறுத்து 70% முதல் 168% வரையிலான லாபத்தை ஆண்டுதோறும் காணலாம் என்று கும்பல் உறுதியளித்தும் உள்ளனர்.
அவ்வாறு ‘ஜுசிஃபீள்ட்ஸ்’ என்ற பெயரில் வலம்வந்த அந்த மோசடித் திட்டத்தில் 180,000 பேர் நிதிகளை முதலீடு செய்திருந்ததாக பிரிட்டிஷ் தேசிய குற்றவியல் அமைப்பு தெரிவித்தது.
திட்டத்தில் ஆள்சேர்க்க ஆடம்பர கார்கள், ஹோட்டல் விருந்துகள், இசைக் காணொளிகள் ஆகியவை விளம்பர இயக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
மேலும், மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட கஞ்சா தோட்டங்களுக்கும் முதலீடு செய்ய விரும்புவோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.