பல்லாண்டு காலமாக சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்தி வரும் முறையைப் புதிய சமூக ஊடகத் தளங்கள் மாற்றி வருகின்றன. 2005ல் மைஸ்பேஸ், 2008ல் ஃபேஸ்புக், பின்னர் 2014ல் இன்ஸ்டகிராம், இதற்கிடையே ஸ்னாப்சாட், டுவிட்டர், வீ சாட் என பல தளங்கள் பிரபலமாகின.
மில்லேனியல் தலைமுறையினரை ஈர்த்த இன்ஸ்டகிராம் காலம் சென்று இப்போது ‘டிக் டாக்’ மோகம் அதிகரித்து வருகிறது. இளையர்களை மட்டுமல்ல, நடுவயதினரைக்கூட தன் வசமாக்கியுள்ளது ‘டிக் டாக்’. மக்கள் ஒருவர் மற்றொருவருடன் இணைய தனித்துவமான புதிய வழிகளை வழங்குகிறது இந்தச் செயலி.
இசை, ஓசைக்கேற்ற உதடு ஒத்திசைவு காணொளிகள் மற்றும் மைக்ரோ-வீடியோ ஆகியவற்றின் கலவையான டிக் டாக்கை முதல்முறையாக பயன்படுத்தும்போது சற்று கடினமாக இருக்கும்.
எனினும், இதன் வசதிகளைப் பயன்படுத்தி நகைச்சுவை, நடனம், முக ஒப்பனை, சமூக கருத்து, இசை போன்ற பல வகையான காணொளிகளை இளையர்கள் பதிவேற்றம் செய்கின்றனர். தலைமுறை ‘இஸெட்’ இளையர்களே டிக் டாக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இத்தளத்தில் பதிவேற்றப்படும் சில பதிவுகள் இளையர்களுக்கு பொருத்தமானவையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலானோரின் பதிவுகள் ரசிக்கக்கூடியவையாகவும் கருத்துள்ளவையாகவும் அமைகின்றன.
நான்கு ஆண்டுகளாக ‘கருமை நிற தோற்றம் கொண்ட பெண்’ எனும் தமது டிக் டாக் பக்கத்தில் நகைச்சுவை, ஆடல், சமூக கருத்து போன்றவற்றை உள்ளடக்கிய பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார் சக்தி மேகனா, 22.
கருமை நிற தோற்றம் கொண்ட பெண், சிங்கப்பூர் இந்தியர், தமிழர், இளையர், புலம்பெயர்ந்த பெற்றோரின் பிள்ளை என தமது பல அடையாளங்களை நகைச்சுவை நாடக, உரையாடல் பாணியில் பலர் ரசித்து புரிந்துகொள்ளும் விதத்தில் காணொளி எடுத்து வருகிறார் சக்தி.
வீட்டில் தாயார், தந்தையுடனான உரையாடல்கள், சமூகத்தில் நடைபெறுபவை என அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை நகைச்சுவை நாடகமாக வடிவமைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் இவர்.
சிறு வயதில் பள்ளிச் சூழல் சக்திக்கு ஏற்ற ஒன்றாக இல்லை. பிற மாணவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளான சக்திக்கு ஆறுதலாக இருந்தன அவர் பார்த்து வளர்ந்த யுடியூப் காணொளிகள்.
குறிப்பாக, பிரபல யுடியூப் கலைஞர் லில்லி சிங்கின் காணொளிகள், தமக்கு தைரியத்தையும் ஊக்கத்தையும் தந்ததாக சக்தி கூறுகிறார். தமது உணர்ச்சிகளையும் திறனையும் வெளிப்படுத்த 2018ஆம் ஆண்டில் டிக் டாக் தளத்தில் காணொளிகளை இவர் வெளியிடத் தொடங்கினார்.
“இன்னும் சில ஆண்டுகளில் டிக் டாக் இருக்குமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இதுபோன்ற சமூக ஊடகத் தளங்கள் உருவெடுத்துக்கொண்டுதான் இருக்கும். மக்களை இணைக்கும் சக்தி சமூக ஊடகத்திற்கு உண்டு. இதைப் பயன்படுத்தி மக்களிடம் நல்ல கருத்துகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்,” என்று கூறிய சக்தி, யதார்த்தமான, உண்மையான கருத்துகளை வெளிப்படுத்தும் காணொளிகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.