பொன்மணி உதயகுமார்
ஊட்டிக்குச் சுற்றுலா சென்றபோது குதிரையுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பில் அதுவரை அனுபவித்திராத இன்பத்தை லாவண்யா சிவானந்தன், 26, பெற்றார். கவலைகளை மறக்கடித்த அந்தக் குதிரைச் சவாரியை இந்நாள்வரை அவரால் மறக்க முடியவில்லை.
பின்னாளில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நிகழ்ச்சி நிர்வாகத் துறையில் பயின்ற காலத்தில் அந்தக் குதிரைச் சவாரி மீண்டும் தனக்குத் தேவைப்
படுவதாக அவருக்குத் தோன்றியது. அதில் கிடைத்த மனநிறைவு மீண்டும் வேண்டும் என்று லாவண்யா நினைத்தார்.
அங்கு உளவியல் சங்கத் தலைவராக இருந்த லாவண்யா, மனநலம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தபோது குதிரையைக் கொண்டு உளவியல் ஆதரவு வழங்கும் முறையைப் பற்றி அறிந்துகொண்டார். அதிர்ஷ்டவசமாக ‘தெரிஸ்’ (Therapeutic & Educational Riding in Singapore) அமைப்பின் நிறுவனர் திருவாட்டி ஜெஸ்ஸியின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.
அவர் மூலம் ‘தெரிஸ்’ பற்றி மேலும் அறிந்துகொண்ட லாவண்யா, குதிரை
களுடன் இணைந்து வேலை செய்வதைத் தன் வாழ்க்கைத் தொழிலாக்கிக்கொள்ள தீர்மானித்தார்.
தெரிஸ் அமைப்பில் பயிற்சி ஊழியராகச் சேர ஜெஸ்ஸியிடம் அவர் கேட்டுக்கொண்டார். குதிரைகள் மீது லாவண்யா கொண்டிருந்த அன்பையும் அவரது உறுதியையும் கண்டு ஜெஸ்ஸி அவருக்கு அந்த வாய்ப்பைத் தந்தார்.
அமைப்பில் ஈராண்டுகளாக பயிற்சி பெற்ற லாவண்யா, உளவியல் அறிவியல் துறையில் தன் இளநிலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டார். இதற்காக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் பயின்று, இன்று தெரிஸ் அமைப்பில் ஓர் உளவியல் நிபுணராக உள்ளார்.
சிறுவயதில் பலமுறை தனிமையை உணர்ந்த லாவண்யா, தன் உணர்வுகளைப் பற்றிக் கூற யாருமில்லாமல் தவித்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக குதிரைகளுடன் நேரத்தைச் செலவழித்து வரும் இவர், அவற்றின் உதவியுடன் மற்றவர்களின் மனநலம் மேம்பட உதவி வருகிறார்.
சிறப்புத் தேவைகளுடைய தம்பியுடன் வளர்ந்த லாவண்யா, இன்று அதிகமாக குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
சிறப்புத் தேவைகள் அல்லது பெருமூளை வாதம் (Cerebral Palsy) போன்ற கடுமையான பாதிப்புகளுடைய குழந்தை
களுக்கு தெரிஸ் அமைப்பின் ஆலோசனை முறைகள் உதவுவதாக இவர் கூறுகிறார்.
மன அழுத்தமும் பதற்றமும் கடுமையல்லாத பாதிப்புகள் எனச் சிலர் கருதினாலும் இவற்றால் பாதிப்படைவர்களுக்கு மனநல உதவி தேவைப்படுகிறது. அந்நேரத்தில் தயங்காமல் உதவி நாடுமாறு லாவண்யா கேட்டுக்கொண்டார்.
வித்தியாசமான நடவடிக்கைள் அடங்கிய 45 நிமிடச் சந்திப்புகள் மூலம் தெரிஸ் வழங்கும் உளவியல் ஆலோசனைகள், கட்டுப்படியான விலையில் கிடைப்பதாக லாவண்யா கருதுகிறார். அதுபோக தெரிஸ் அமைப்பின் உதவியை நாடி வரும் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, ஒவ்வொரு சந்திப்பும் திட்டமிடப்படுவதாக லாவண்யா கூறுகிறார். குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கிவரும் லாவண்யா, பிள்ளைகளின் பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் மனநல மேம்பாட்டைக் கண்காணிக்க உதவுகிறார்.
குதிரை என்றாலே பொழுதுபோக்காக சவாரி செய்யும் ஒரு விலங்கு என்ற எண்ணத்தை மாற்றுவது பெரும் சவால் என்றார் லாவண்யா. தெரிஸ் அமைப்பின் மருத்துவச் சேவைகள் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்.
மற்ற சேவைகள் போல் ஓர் அறைக்குள் இல்லாமல் இயற்கைப் பின்னணியில் அமைப்பின் சேவைகள் அமைந்திருக்கும். ஆனால், சில நேரங்களில் வானிலை மாற்றம், நிலப் பற்றாக்குறை, குதிரைகள் எளிதில் மிரளும் தன்மை போன்றவற்றால் சேவை வழங்குவதில் சவால்கள் உண்டு என்று லாவண்யா குறிப்பிட்டார்.
லாவண்யா தற்போது பகுதிநேர வேலையாகக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார். குதிரைகள் சார்ந்த பகுதிநேரப் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.