ஃபாஜார் எல்ஆர்டி நிலையத்தில் மாண்டு கிடந்த ஆடவர் இரண்டு ரயில்களால் மோதப்பட்டிருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். மலேசியரான 43 வயது ஆங் பூன் டோங்கின் மரணம் குறித்து நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று ஆங்கின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டது. அவர் இரண்டு ரயில்களால் மோதப்பட்டிருக்கலாம் என்று நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஃபாஜார் எல்ஆர்டி நிலையத் தில் உள்ள தளமேடையிலிருந்து தண்டவாளத்தில் ஆங் விழுவதற்கு முன்னதாக அவர் இரண்டு பெரிய புட்டிகள் அளவு பீர் அருந்தி இருந்ததாகவும் குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது. அவ்வழியாகச் சென்ற இரண்டு ரயில்களில் ஆங்கின் ரத்தக் கறை படிந்திருந்ததாக விசாரணை நடத்திய போலிஸ் அதிகாரி கூறினார்.
அந்த இரு ரயில்களில் ஒன்றுக்கு அடியில் அவரது பை கண்டெடுக்கப்பட்டது. தளமேடையிலிருந்து தண்ட வாளத்தில் ஆங் விழும் இரண்டு வினாடிக் காட்சி நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் ஆங் தண்டவாளத்தில் விழுவதை 'டென் மைல் ஜங்ஷனில்' உள்ள ரயில் சேவைக் கட்டுப்பாட்டு மையத்தில் 22 கண்காணிப்புத் திரைகளுக்கு முன் அமர்ந்து கொண்டிருந்த ரயில் சேவைக் கட்டுப்பாட்டு அதிகாரி கவனிக்கவில்லை. மற்ற நிலையங்களில் ரயில் சேவை ஒரு நிறைவுக்கு வந்து கொண்டிருந்ததால் அவற்றில் அவர் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம்.