பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் மீது லெபனானிய நகைக் கடை ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. ரோஸ்மாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 44 நகைகள் தொடர்பில் குளோபல் ராயல்டி டிரேடிங் எனும் நகைக்கடை நிறுவனம் 14.8 மில்லியன் அமெரிக்க டாலர் (S$20 மில்லியன்) வழக்கு தொடுத்துள்ளது. அந்த நகைகளை பெற்றுக்கொண்டதை திருமதி ரோஸ்மா கடந்த மே 22ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
திருமதி ரோஸ்மா தங்கள் நகைக் கடையின் நீண்டகால வாடிக்கையாளர் என்றும் அவர் கேட்கும் நகைகளை மொத்தமாக அனுப்பி வைப்பது வழக்கம் என்றும் அவற்றுள் அவர் தேர்வு செய்யும் நகைகளுக்கான பணத்தை அவர் கொடுத்துவிடுவார் என்றும் மற்ற நகைகளை திருப்பி அனுப்பி விடுவார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. கடைசியாக அவருக்கு அனுப்பிய வைர நெக்லஸ், மோதிரம், வளையல் ஆகிய நகைகளுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியது.