சிங்கப்பூர் ஊழியரணியில் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஓட்டுநரில்லா வாகனங்களில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்வதற்காக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு நிர்வாகத்திற்காக புதிய மையம் ஒன்றை அமைத்து இருக்கிறது. இணைப் பேராசிரியர் கோ யிஹானின் மேற்பார்வையில் இந்தப் புதிய ஆய்வு மையம் செயல்படும். இதற்காக தேசிய ஆய்வு அறவறுவனமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் $4.5 மில்லியன் மானியம் வழங்கியுள்ளன.
எட்டு ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள இருக்கும் இந்த மையம், தனது ஆய்வுப் பணிகளின்போது பல்வேறு பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும். எடுத்துக்காட்டாக, நம்பகமான செயற்கை நுண்ணறிவு தொடர்பில் லண்டன் குவீன் மேரி பல்கலைக்கழகத்தின் வர்த்தகச் சட்டக் கல்வி மையத்தின் இணைந்து பணியாற்றும். இப்புதிய மையத்தால் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களும் பலனடைவர்.