அமைச்சரவை சந்திப்பின்போது மூர்ச்சையான நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டுக்குச் சிறப்பாக முதலுதவி புரிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதலுதவியாளர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளார் பிரதமர் லீ சியன் லூங். அவசர அழைப்பு கிடைத்த ஏழு நிமிடங்களில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டது என்றும் முதலுதவியாளர்கள் அறைக்குள் வந்தபோது துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி திரு ஹெங்கிற்கு மருத்துவ முதலுதவி புரிந்துகொண்டிருந்தார் என்றும் பிரதமர் லீ கூறினார்.
எனினும் தங்ளது மற்ற பணிகளைச் செவ்வனே புரிந்த முதலுதவியாளர்கள் டாக்டர் ஜனிலுக்கு உதவினர் என்றும் குறிப்பிட்டார். அப்போது மூத்த அதிகாரியான ஜெனிஸ் லீ, டாக்டர் ஜனில் புரிந்த செயல்முறை ஒன்று தவறு என்று சுட்டிக் காட்டினார். ஆனால் டாக்டர் ஜனில் அப்படிச் செய்ததற்கான காரணத்தைக் கூறியதும் அந்தக் காரணத்தை ஏற்றுக்கொண்ட ஜெனிஸ் தொடர்ந்து முதலுதவி செய்தார் என்று பிரதமர் லீ நேற்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அனுப்பிய மடலில் தெரிவித்தார்.
இஸ்தானாவில் கடந்த வியாழக்கிமை நடந்த அமைச்சரவை சந்திப்பின்போது மூர்ச்சையாகிய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டிற்கு மருத்துவ முதலுதவி வழங்கிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குழுவினர். (வலமிருந்து) ஸ்டாஃப் சார்ஜண்ட் ஜெனிஸ் லீ, ஸ்டாஃப் சார்ஜண்ட் முகமது இம்ரான், முதலுதவி பயிற்சியாளர் ஷீனா சியாங், முழுநேர தேசிய சேவையாளர் கார்ப்பரல் இயன் லோக். ஆம்புலன்ஸ் எண் 113யைச் சேர்ந்த இவர்கள் திரு ஹெங்கிற்குப் புரிந்த சிறப்பான முதலுதவியைப் பிரதமர் லீ சியன் லூங் பாராட்டியுள்ளார். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்