சிங்கப்பூரர்களின் ஆயுள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. 1960ல் 59 ஆக இருந்த ஆண்களின் ஆயுள், 2015ல் 80 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 63ல் இருந்து 85 ஆகவும் கூடியுள்ளது. கடந்த 2016ல் சிங்கப்பூரரின் சராசரி ஆயுள் 83.3 ஆண்டுகள். வரும் 2040ல் இது 85.4 ஆண்டுகளாக உயரும் என்பது அமெரிக்கா வின் சுகாதார அளவீட்டு, மதிப்பீட்டு நிலைய (ஐஎச்எம்இ) ஆய்வின் கணிப்பு. மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழும் நாடு களின் பட்டியலில் ஸ்பெயின், ஜப்பானுக்கு அடுத்து சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியும் சிறந்த சுகாதாரப் பராமரிப்பும் இதனைச் சாத் தியமாக்கி உள்ளன. இது பெருமைகொள்ளத் தக்க ஒரு நிலவரம். இந்தச் சாதனை ஒருபுறம் இருக்க, நீண்ட ஆயுளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் முக்கியமாகி வருகிறது.
வயதாக ஆக, அன்புக்குரியவர்களின் இழப்பு, பிரிவு, நோய்கள், உடல் நலிவு, வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்கள் எல்லாம் சேர்ந்து மனச்சோர்வைத் தரக்கூடும். முதுமையில் உடல், மன நலம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஏற்படுவ தல்ல. அது வாழ்நாளில் மெல்ல மெல்ல கட்ட மைக்கப்படுவது. பிற்காலம் மகிழ்ச்சியான, நலமான வாழ்வாக அமைவதை உறுதிப் படுத்த, தனி மனிதராகவும் சமூக அளவிலும் திட்டமிட வேண்டியது அவசியமானது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உடல்நலம், மனநலம், சமூக நலம் மூன்றும் தேவை.
உடல்நலமும் மனநலமும் நீடித்திருக்க ஆரோக்கிய வாழ்க்கை முறையும் சமூகத்தில் ஈடுபாடும் நிதிப் பாதுகாப்பும் ஒருவருக்கு அவசியம். பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதிய வர்கள் உடலாலும் மனதாலும் தங்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்வது கட்டாய மானது. செயலற்று இருந்தால் உடலின் தசைகள் இறுகி, உடல் இயக்கம் சிரமமான தாகிவிடும். பிறகு சாதாரணமான நடமாட்டத் திற்கும் பெரு முயற்சி தேவைப்படும். அதேபோல், மூளைக்கு வேலை கொடுக்காமல், பேச்சுத் துணையின்றி வீட்டில் முடங்கியிருந்தால் வெகு விரைவில் மனச் சோர்வும் ஞாபகமறதியும் ஏற்படலாம். அதனால், முதியவர்கள் தங்களுக்குப் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மூளையையும் மனதையும் எப்போதும் புத்துணர்ச்சி யுடன் வைத்திருக்க வேண்டும். இத்தகைய ஈடுபாட்டுக்கு ஆரோக்கியத்துடன், வாழ்க்கை யில் பரபரப்பாக இருக்கும்போதே தயாராகி விடவேண்டும். சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுகால சேமிப்புக்குத் திட்டமிடவேண்டும்.
மத்திய சேம நிதி இருந்தாலும், அது பலருக்குப் போதுமானதாக இருப்பதில்லை.
எனவே, நிதித் திட்டமிடுதல் சரியாக இருப்பது முக்கியம். இதற்கு அரசாங்கம் அளிக்கும் அனுகூலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக, முதியவர்கள் தங்களது வீவக வீடுகளின் மீதி குத்தகைக் காலத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்து அதற்கீடான ரொக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும். ஒருவரின் வாழ்நாளில் முதல் 20 ஆண்டுகள் கல்வியில் கழிகிறது. 20லிருந்து கிட்டத் தட்ட 55-, 60 வயதுவரை பொருளீட்டலில் ஓடிவிடுகிறது. ஓய்வுக்காலம் குறித்தும் உடல் நலம் குறித்தும் பெரும்பாலானோர் 60 வயதுக்குப் பிறகே சிந்திக்கத் தொடங்கு கின்றனர். உடல்நலக் கோளாறுகள் இக்காலத் தில் தலைகாட்டத் தொடங்கிவிடும்.
அந்த வயதில், பிந்திய காலத்திற்குத் திட்டமிடுவது, வெள்ளம் வந்த பின்னர் அணைக் கட்டும் செயலாகவே இருக்கும். மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதமும் குறைந்துகொண்டே வருகிறது.
சிங்கப்பூர் வருங்காலத்தில் முதியவர்கள் அதிகம் வாழும் மூப்படைந்த சமுதாயமாக இருக்கும். வாழ்க்கைச் செலவினமும் கூடி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கும் சுமை அதிகமாக இருக்கும். இந்நிலையில், முதுமைகாலப் பராமரிப்பு என்பது ஒரு சவாலாகிவிடும். முதுமையின் சோர்வு இருந்தாலும், மகிழ்ச்சியோடும் நிறைவோடும் அர்த்தமுள்ள தாக முதுமைக் காலத்தை ஆக்குவது அவர வர்களின் கைகளில்தான் உள்ளது. 2018-10-21 06:00:00 +0800