காலம் உண்மையிலேயே பறக்கிறது. அதற்குள்ளாக 2019 ஏறக்குறைய முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு சாதனைகளை நாம் ஆண்டு முடிவில் அசைபோட்டு பார்ப்பது வழக்கம். அதே காலகட்டத்தில் அடுத்த ஆண்டிற்கு நாம் ஆயத்தமாக வேண்டியதும் முக்கியம். இந்த ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, டிசம்பர் மாதத் தொடக் கத்தில் வரவுசெலவுத் திட்டம் 2020க்கு முந்தைய கலந்துரையாடலைத் தொடங்கினோம்.
நம்முடைய தேசிய வரவுசெலவுத் திட் டம் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் முக்கியமானது. நமது நிதியை நாம் எப்படி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்பது நம்முடைய நன்னெறிகளையும் முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது. ஒரே மக்களாக, ஒரே நாடாக நாம் முன்னேறும் வழியையும் அது நிர்ணயிக்கிறது.
புறச்சூழல் சவால்கள் ஏறுமுகம்
அனைத்துலக சூழ்நிலை தொடர்ந்து சவால்மிக்கதாகவே இருந்து வருகிறது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் பதற்றங்கள், உலக மின்னணு தொழில்துறை இறங்கு முகம் போன்ற நிச்சயமில்லாத நிலவரங்கள் தொடர்கின்றன. உலகம் வேகமாக மாறி வருகிறது. உலகமயமாக்கம், அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக வருமான ஏற்றத் தாழ்வு அதி கரிக்கிறது. சமூகங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் விரிவடைகின்றன.
இருந்தாலும் மற்ற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வேறுபட்டது. வெற்றி பெற வேண்டுமானால் தொடர்ந்து இந்த வேறுபட்ட நிலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டும். நம்முடைய வலுவான பொரு ளியல் அடிப்படைகளும் ஆசியாவில் வட்டார வளர்ச்சி தொடர்ந்து இடம்பெற்று வருவதும் நமக்கு நம்பிக்கை தரும் அம்சங்கள்.
இந்த வாய்ப்புகளில் பெரும்பாலான வற்றைத் தொடர்ந்து நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய எதிர்காலத்திற்குத் தோதாக நாம் ஆயத்தமாக உதவும் உத்திபூர்வ நிதித் திட்டம்தான் தேசிய வரவுசெலவுத் திட்டம். இது முக்கியமானது. ஆகையால் யோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்க எல்லா சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. இத்தகைய அணுகுமுறை மூலம் நாம் பலதரப்பட்ட கருத்துகள், யோசனைகளின் வழி நன்மை பெறுவது ஒருபுறம் இருக்க, நம் குடிமக்களுக்குக் கவலை அளிக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளையும் நாம் உறுதிப்படுத்துகிறோம்.
பட்ஜெட் 2020க்கான உத்திகள்:
உருமாற்றம், ஆதரவு, கட்டிக்காத்தல் ஆகியவை பட்ஜெட் 2020க்கான உத்திகளாக இருக்கும். நம் தொழில்துறைகளையும் ஊழியர்களையும் உருமாற்றுவது நம்முடைய நிறுவனங்கள் நிச்சயமில்லாத நிலவரங்களையும் மாற்றங்களையும் சிறந்த முறையில் சமாளித்து, ஆற்றல்களைப் பலப்படுத்தி, புத்தாக்க அணுகுமுறைகளைக் கைக்கொண்டு வட்டாரத்தில் விரிவடைய உதவுவது நமது முன்னுரிமை.
நம்முடைய பொருளியல் உருமாற்றம் சரியான பாதையில் முன்னேறி வருகிறது. நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆத ரவைப் பொருத்தமான நேரத்தில் பொருத்த மான வகையில் தொடர்ந்து நாம் அளித்து வருவோம். நம் ஊழியர்களின் தேர்ச்சிகள் மேம் படவும் அவர்கள் மறு தேர்ச்சிகளைப் பெறவும் தொடர்ந்து நாம் ஆதரவு அளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் அவர்களுக்குக் கிடைக்கும். பல ஊழியர்கள் ஏற்கெனவே தேர்ச்சிகளில் மேம்பட்டு இருக்கிறார்கள். இதில் மேன்மேலும் முன்னேற ஊழியர்களுக்கு ஊக்கமூட்டுகிறோம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கம், Adapt and Grow எனும் ‘மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல்’ திட்டம் ஆகியவற்றின் அனுகூலங்களை ஊழியர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு அளித்தல்
எல்லா சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி ஒரே சிங்கப்பூரராக ஒன்றிணைந்து நாம் முன்னேறுவதை உறுதிப்படுத்துவது நம்முடைய சமூகக் கொள்கைகளின் இதயம் போன்ற இலக்காகும். இளம் தம்பதிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். சிறார்களுக்கு கல்வி வழியாக தங்களுடைய முழு ஆற்றலையும் கூடினபட்சம் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு களை வழங்குவோம். அதிகம் சம்பாதித்து அதிகம் சேமிக்கச் செய்வதன் மூலம் முதி யோர்களுக்கு உதவுவோம்.
வாழ்க்கைச் செலவு பற்றி பல சிங்கப்பூ ரர்கள் கவலை அடைகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். வீடு, சுகாதாரப் பரா மரிப்பு, கல்வி உள்ளிட்ட முக்கிய செலவினங்கள் தொடர்பில் சிங்கப்பூரர்களுக்கு உதவ ஏற்கெனவே பல திட்டங்கள் இருக்கின்றன. அதேவேளையில், பொருளியல் நிச்சய மில்லாத இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூ ரர்களுக்கு இன்னும் சிறந்த முறையில் எப்படி உதவ முடியும் என்பது பற்றி நாம் பரிசீலித்து வருகிறோம்.
கட்டிக்காக்கும் ஆற்றலை உறுதி செய்வோம்
பருவநிலை மாற்றம் என்பது நிலையான ஒரு மிரட்டல். அனைத்துலக சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினர் என்ற முறையில் பருவநிலை மாற்றத்துக்கு அடிப்படையான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண நம் பங்கை நாம் ஆற்ற வேண்டும்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளித்து மீண்டு வர போதிய ஆற்றலுடன் நம் நாடு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிதி நிலைத்தன்மையையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தொகை மூப்படைவதால் சுகாதாரப் பரா மரிப்புச் செலவினம் மிகவும் அதிகரிக்கும். அதேவேளையில், பாலர்பள்ளிக் கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக தொகையைச் செலவிட வேண்டி இருக்கும்.
இதைக் கருத்தில்கொண்டு பார்க்கை யில், அரசாங்கத்தின் அடுத்த பருவத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தை நாம் உயர்த்த வேண்டி இருக்கும். நம்முடைய சமூக மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறை வேற்ற நமக்கு ஆகும் வழக்கமான செலவு கள் அதிகரித்து வருகின்றன.
இதைச் சமாளிக்க வரியை ஏற்றுவதே சரியான, பொறுப்புள்ள செயலாகும். இருந் தாலும் வரி கூடும்போது அதைத் தங்க ளால் சமாளிக்க முடியுமா என்பதை நினைத்து மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பது தெரியும். இந்த வரி அதிகரிப்பைச் சமாளிக்கும் வகையில் சிங்கப்பூரர்களுக்கு உதவ நாம் உறுதிபூண்டு இருக்கிறோம்.
வரவுசெலவுத் திட்டம் 2020, உதவித் திட்டம் ஒன்றின் விவரங்களைக் கொண்டி ருக்கும். அந்தத் திட்டம் குறைந்த, நடுத்தர வருவாய் சிங்கப்பூரர்களுக்கு உதவும்.
வரும் ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்ந்து சிக்கல் கூடியதாக இருக்கும். அதைச் சமாளிக்கும் முயற்சியில் நாம் ஒற்று மையாக இருந்து வர வேண்டும். அந்தச் சவால்களுக்கு எல்லா சிங்கப்பூரர்களும் விவேகத்துடன் நடந்துகொண்டு தீர்வுகாண வேண் டிய தேவையும் இருக்கும்.
அதோடு, எதிர்காலத்திற்கான புதிய பாதையை அவர்கள் வகுக்க வேண்டிய தேவையும் இருக்கும்.
வரவு செலவுத்திட்டம் 2020ஐ உரு வாக்குவதன் ஊடே, நாம் சிங்கப்பூரர் களுடன் கூடிய பங்காளித்துவ உற வையும் பலப்படுத்துகிறோம்.
புதிய கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் சேர்ந்து உருவாக்கு வதன் மூலமாகவும் சேர்ந்து நடை முறைப்படுத்துவதன் வழியாகவும் இதனை நாம் செய்கிறோம்.
வரவுசெலவுத் திட்டம் 2020க்கான யோசனைகளுக்கு உருவம் கொடுக்க வும் நம் எதிர்காலத்தை உருவாக்க உதவவும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளையும் யோசனைகளையும் பெறலாம் என்பது நமது நம்பிக்கை.
---
பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி, இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, இந்தியச் சமூகம் சார்ந்த முக்கிய விவகாரங்களையும் அக்கறைகளையும் கலந்துபேசும் மாதாந்திர கட்டுரை.