முரசொலி
இந்த பூமி தோன்றி, அதில் உயிரினம் பரிணமித்த சம்பவம் எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்று.
கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன் ஏராளமான உயிரினங்கள் பரிணமித்து அழிந்துபோய் இருக்கின்றன. அவற்றில் விலங்குகளும் தாவரங்களும் உள்ளடங்கும். டைனசோர் போன்ற விலங்குகள் இதற்கு எடுத்துக்காட்டு.
கால ஓட்டத்தில் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், மாற்றங்களை எல்லாம் சந்தித்து, பற்பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் வழிவழியாக இனப்பெருக்கம் செய்து நிலைத்து வாழ்கின்றன.
எந்த ஓர் உயிரினமும் தன் அடுத்த வாரிசை உருவாக்கி விட்டு மடியவேண்டும் என்பது இயற்கை நியதி. விலங்கு, தாவர வளங்களை மையமாக வைத்துதான் உணவு வட்டம் செயல்படுகிறது. ஓர் உயிரினத்தைச் சார்ந்து மற்றொன்று என்று அந்த வட்டம் சுழல்கிறது.
உலகின் குறிப்பிட்ட பகுதிகளில், அந்தப் பகுதியின் இயற்கை சூழல்களுக்குப் பொருத்தமான குறிப்பிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.
சில நேரங்களில் குறிப்பிட்ட ஓர் உயிரினம் அளவுக்கு அதிகமாக இனப்பெருக்கம் அடைந்து மனித இனத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் பெரும் பிரச்சினைகளை உருவாக்கி விடுவதும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு செய்திதான் அண்மையில் தலைகாட்டியது. அதாவது, அடுத்த பத்தாண்டு காலத்தில் சிங்கப்பூர் முழுவதும் காட்டுப் பன்றிகள் பல்கிப் பெருகிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற அந்தச் செய்தி, சிலருக்கு மலைப்பூட்டி இருக்கலாம். குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
காட்டுப் பன்றிகள், நாட்டில் தெற்குக் காட்டுப் பகுதிகளைத் தவிர, இதர பெரும்பாலான பசுமை இடங்களில் பெருகிவிட்டன, அடுத்த பத்து ஆண்டுகளில் அவை எங்கும் அதிகரித்துவிடும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, காட்டுப் பன்றிகள் இந்த மண்ணுக்கே உரிய உயிரினம். பன்றி ஒவ்வொன்றும் 100 கிலோ வரை எடை இருக்கும். காட்டுப் பன்றி 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் உயிர் வாழக்கூடிய உயிரினம்.
விலங்கு, தாவரம் இரண்டையும் உண்ணும். என்றாலும்கூட தாவரங்கள்தான் அதற்குப் பிரதான உணவு. மண்ணைத் நோண்டி கிழங்குகள், தண்டுகள், விதைகளைத் தின்னும்.
இளம் செடிகொடிகள், தண்டுகள் போன்ற வற்றையும் மேய்ந்துவிடும். பெண் காட்டுப்பன்றி 18 மாதம் ஆனது முதல் இனப்பெருக்கம் செய்யும். ஆண்டு ஒன்றுக்கு நான்கு முதல் ஆறு குட்டிகள் போடும்.
சிங்கப்பூரில் நிலைமை இப்படியே போனால் இன்னும் இருபது ஆண்டுகளில் காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் வேகமாக அதிகரிக்கும். பல காட்டுப் பகுதிகளை அவை ஆக்கிரமித்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் காட்டுப் பன்றிகள் பெருக பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நல்ல உணவு அபரிமிதமான அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. காட்டுப் பன்றியை வேட்டையாடி கொன்று உண்ணும் வேறு உயிரினம் இல்லை. நாட்டில் விலங்கு வேட்டைக்கு முழு தடை இருக்கிறது. இவை எல்லாம் காட்டுப் பன்றிகள் பல்கிப் பெருக சாதகமாக உள்ளன.
காட்டுப் பன்றிகள் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டால் மனிதர்களுக்கு நடைமுறைப் பிரச்சினைகள் மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு கணிசமான அளவுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
இரை தேடுவது, வசிப்பிடத்தை உருவாக்கு வது போன்ற காரியங்களால் காட்டுப் பன்றிகள் காடுகளின் இயற்கை இயல்புகளையே மாற்றி விடக்கூடியவை. உள்ளூர் மண்ணில் ெசழித்து வளரக்கூடிய இந்த மண்ணுக்கே சொந்தமான சில வகை தாவரங்கள் அடியோடு அழிந்துவிடக்கூடிய நிலையும் ஏற்படலாம். காட்டுத் தாவர இனப்பெருக்க ஆற்றலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
காட்டுப்பன்றிகள் சில நேரங்களில் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் வந்து அவர்களைத் தாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
இப்படித்தான் சென்ற ஆண்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஈசூனில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஒரு மாது அந்நேரம் சுயநினைவை இழந்தார்.
இயற்கையிலேயே ஏற்படக்கூடிய ஆப்பிரிக்க கிருமி காய்ச்சல் போன்ற தொற்றுகள் காரணமாக காட்டுப் பன்றி இனம் அழிந்துவிடக்கூடிய ஆபத்து அதிகம். அந்த தொற்றின் மரண விகிதம் 90%க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும்கூட தப்பிவிடும் பன்றிகள் இருக்கதான் செய்யும், அவை பெருகத்தான் செய்யும்.
ஆனாலும் சிங்கப்பூரில் மனிதர்களை விரட்டி வெளியேற்றிவிடும் அளவுக்கு காட்டுப் பன்றிகள் பல்கிப்பெருகி விஸ்வரூபம் எடுத்துவிடும் என்று அஞ்சுவது பொருத்தமற்றதாக, தேவையற்றதாகவே இருக்கும்.
காட்டுப் பன்றிகளால் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் அவற்றை விவேகத்தாலும் கட்டொழுங்கினாலும் நாம் சமாளித்துவிடலாம் என்பதே நடைமுறை உண்மை. தேசிய பூங்காக் கழகம் இதை ஏற்கெனவே செய்துவருகிறது.
சிங்கப்பூரில் கூடுமான அளவுக்குத் தாவர, விலங்கு வளங்களைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் வளத்தைப் பெருக்கி, அதோடு, பாதுகாப்பான பசுமைச் சூழலில் மக்கள் வாழ வகை செய்வதே அதன் குறிக்கோள்.
இதனால்தான் பன்றிகளைக் கொல்வது என்பது வேறு வழியே இல்லாதபட்சத்தில் கடைசி முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகிறது. காட்டுப் பன்றிகள் பிரச்சினையைப் பொறுத்தவரை சிங்கப்பூரர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் பன்றிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உணவு கொடுக்கக்கூடாது.
காட்டுப் பன்றி நடமாட்டப் பகுதிகளுக்கு அருகே வசிப்போர், பன்றிகள் தோண்ட இயலாத அளவுக்குப் பாதுகாப்பு மிக்க வலுவான அரணை அமைத்துக்கொள்ள வேண்டும்.