சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ், கஸ்தூரி ராஜா மகன் அல்ல, தங்களின் மகன் எனத் தெரிவித்து ஒரு தம்பதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சினை ரஜினியைக் கவலைகொள்ள செய்துள்ள நிலையில், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்த கதிரேசன்-மீனாள் தம்பதி புதிதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நேரக் காப்பாளராகப் பணியாற்றுகிறார் கதிரேசன்.
அவரது மனைவி மீனாள். இது பற்றி பேசிய அவர்கள், "எங்கள் மகன் கலையரசன் கடந்த 2002ஆம் ஆண்டு, 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்களை விட்டுப் பிரிந்து சென்னைக்குச் சென்றார். சென்னை சென்ற எங்கள் மகன்தான் தற்போது தனுஷ் என்ற பெயரில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். "நடிகராகிய பிறகு அவர் எங்களைப் பார்க்க வர வில்லை. நாங்கள் அவரைப் பார்க்க சென்னை சென்றால் கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தார் எங்கள் மகனைச் சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள். "இது குறித்துக் காவல்நிலையம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம்," என்று கூறினார்கள்.