தன்னை பல சர்ச்சைகள் சுற்றியிருந்த போதிலும் ரஹ்மான் ஆதரவு அளித்தார் என்று சிம்பு கூறியுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கௌதம் மேனன் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கடிதத்தைப் பதிவிட்டுள்ளார்.
"என்னிடமிருந்து எதற்காக இப்போது கடிதம்? ஏனென்றால் 'அச்சம் என்பது மடமையடா' வெளியீட்டுக்கு முன்பு எனது உணர்வுகளையும் நான் அனுபவித்துக் கொண்டிருப்பதையும் எழுதி வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன். "'அச்சம் என்பது மடமையடா' படத்துக்காக மீண்டும் இணைந்த கௌதம் மேனன், ரஹ்மான், சிலம்பரசன் -இந்த மூவரின் கூட்டணி, 'விண்ணைத்தாண்டி வருவாயா' செய்த மாயத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர உழைத்தது எளிதான காரியம் அல்ல. இதில் அந்த மாயத்தை மீண்டும் உருவாக்குவது மட்டுமல்ல, நல்ல சினிமாவுக்கான தேடலில் நாங்கள் அதையும் தாண்டிச் சென்றுள்ளோம்.
"என்னை நம்பி, வெகு சிலரே எனக்களித்த சுதந்திரத்தைத் தந்த கௌதம் மேனனுக்கும் அற்புதமான பாடல்களும் பின்னணி இசையும் தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூற விரும்புகிறேன் என்றார் சிம்பு.