தனது அண்மைய அனுபவம் குறித்து பார்ப்பவர்களிடம் எல்லாம் வியப்புடன் பேசுகிறார் கீர்த்தி சுரேஷ். சென்னை அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் சிலிக்கான் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார் பிரபல ஓவியர் ஸ்ரீதர். அங்கு அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் இங்கு சிலைகளாக உயிர் பெற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.
இந்த அருங்காட்சியகத்தை அண்மையில் பார்வையிட்டாராம். கீர்த்தி சுரேஷ், ஒவ்வொரு சிலையையும் குழந்தை போல குதூகலத்துடன் கண்டு ரசித்துள்ளார். "ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஓவிய கண்காட்சிக்கு சென்றாலும் அங்கு அவர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த அருங்காட்சியகம் குறித்து அவர் சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. இது மட்டுமல்ல, அவரிடம் மேலும் பல அற்புதமான விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துவார்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.