வீட்டில் கணவன், மனைவி, இரு மகள்கள் அனைவருமே தீவிர வாசகர்கள் என்பது மட்டுமல்லாமல் வீட்டில் நடக்கும் இலக்கிய உரையாடல்கள் தந்த அனுபவங்கள் நேற்று கணவன் செந்தில்குமார் நடராஜன், மனைவி சுபா செந்தில்குமார் இருவருக்கும் தங்கமுனை விருது கிடைக்கச் செய்துள்ளது.
தேசிய கலைகள் மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் படைப்பிலக்கியப் போட்டியில், இந்த ஆண்டு தமிழ்ப் பிரிவில் சுபாவிற்கு கவிதைப் போட்டியில் முதல் பரிசும் செந்தில்குமாருக்கு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் வழங்கப்பட்டது.
நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் நடத்தப்படும் போட்டிகள் இவ்வாண்டு 14வது முறையாக நடத்தப்பட்டன.
இவ்வாண்டு ஆக அதிகமாக ஒட்டுமொத்தமாக 1,200க்கும் மேற்பட்ட படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுஉள்ளன. ஆறு வயதுக்கும் 81 வயதுக்கும் உட்பட்ட சமூகத்தின் பல தரப்பையும் சேர்ந்தோர் போட்டியில் கலந்துகொண்டனர். அதில் சுமார் 60 விழுக்காடினர் 35 வயது அல்லது அதற்கும் குறைவானர்கள்.
இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதைகள் நல்ல தரத்துடன் இருந்ததாகக் கூறினார் நீதிபதிகளில் ஒருவரான 2014ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி யுவா புராசகர் விருது பெற்ற டாக்டர் சுனில் கிருஷ்ணன்.
“அனைத்துப் படைப்புகளும் நல்ல தரத்தைக் கொண்டிருந்தன. அதனால் எங்கள் வேலை கடினமாகியது. ஆனால் ராமாயணத்தையும் தற்கால சம்பவத்தையும் அழகாக பின்னிப்பிணைந்த செந்தில்குமாரின் ‘தபோவனம்’ சிறுகதைக்கு முதல் பரிசு கொடுத்தோம்,” என்றார் அவர்.
“இலக்கியம் சார்ந்து உரையாடும் இணையர் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. இருவருமாய் பகிர்ந்துகொண்ட அத்தனை இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் அனுபவங்களும் உன்னதமானவை. அவையே இருவரையும் எழுதுவது என்ற புள்ளியை நோக்கி நகர்த்தின. இன்று இருவருமாய்ச் சேர்ந்து விருது பெறுவது என்பதில் அளவில்லா மகிழ்ச்சி,” என்று 2015ஆம் ஆண்டு தங்கமுனைப் போட்டிகளில் தமிழ்க் கவிதைக்கான இரண்டாம் பரிசு பெற்றிருந்த சுபா பெருமிதம் அடைந்தார்.
மனம் முழுவதும் காதலைத் தேக்கிவைத்துக்கொண்டு முதன்முதலில் கவிதை எழுதத் தொடங்கிய சுபா, இப்போதெல்லாம் கவிதை எழுதுவதற்கான உந்துதல் வரும்போது எழுதுவதே மனதிற்கு நெருக்கமான உணர்வைத் தருகிறது என்றார்.
“ஒவ்வொருவரின் சிறிய வாழ்க்கைக்குள்ளும் கொட்டிக் கிடக்கும் அக உணர்வுகளை கவிதைகளின் வழி நுழையவும் அவற்றை புறவுலகிற்கு காட்சிப்படுத்த முயற்சிப்பதுமே என்னை எழுதத்தூண்டுவதாக நம்புகிறேன்,” என்று தமது கவிதைப் பயணத்தை அவர் வருணித்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் தங்கமுனை போட்டியில் சிறுகதைக்கான மூன்றாம் பரிசைப் பெற்றிருந்த கணவர் செந்தில்குமாருக்கு இம்முறை முதல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
“என்னளவில் நேர்மையான உழைப்பைத் தந்தே இந்த முறையும் எழுதினேன். இந்தக் கதை ஏதாவது ஓர் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது,” என்றார் செந்தில்குமார்.
“2017ல் தங்கமுனை விருதே என்னால் எழுதவும் முடியும் என்ற ஒரு சிறிய தன்னம்பிக்கையைத் தந்தது. அதற்குப்பின் எழுதிய நான்கு கதைகளில் ஒரு கதையே இப்போது முதல் பரிசைப் பெற்றுத் தந்திருக்கிறது,” என்று கூறிய அவர், அந்த முதல் கதை தமக்கு அனுபவமற்ற தொடக்கம் என்றார்.
“எனக்குள் நிறைய கேள்விகள் உண்டு. அவை பெரும்பாலும் என் அனுபவங்களின் வழியாகவும், வாசிப்பின் வழியாகவும் வந்தடைந்தவை. இந்தக் கேள்விகளைத் தொட்டுச்செல்லும் சம்பவங்கள் நிகழும்போது, அந்தக் கேள்வியை மையமாக வைத்து அந்த அனுபவத்தை புனைவைச் சேர்த்து எழுதுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.
தமிழில் நிறைய சிறப்பான எழுத்தாளர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் எழுதிய படைப்புகளைப் படிப்பதால் ஆர்வமும் ஆற்றலும் மேலோங்கும் என்றார் கவிதை பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற இராதாகிருஷ்ணன் பாலாஜி.
“நம் நூலகங்களில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. கவிதையையோ சிறுகதையையோ எழுத நினைக்கும் எவரும் வாசிக்க வேண்டியது அடிப்படை அவசியம்,” என்று பாலாஜி தெரிவித்தார்.
சிங்கப்பூர் நூலக வாரியக் கட்டடத்தின் ‘தி பாட்’ அரங்கில் நேற்றுக் காலை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான்கு மொழி களிலும் மொத்தம் 27 பேர் விருது பெற்றனர்.
தமிழ்ப் பிரிவில் கவிதைக்கு