சிங்கப்பூரில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வருமானம் 6% குறைவாக இருப்பதை 2018ஆம் ஆண்டு மனிதவள அமைச்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
“சிங்கப்பூரில் ஆண், பெண் அனைவரும் சமமான கல்வியைப் பெறுகிறார்கள். ஒரு வேலைக்குத் தகுதியானவரா என்ற மதிப்பீடும் சமம்தான். ஆண், பெண் இருவரும் சமமாகச் செய்யும் வேலைக்குச் சம்பளத்தில் வேறுபாடு இருப்பது அவசியமும் இல்லை சரியானதும் இல்லை,” என்றார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) பெண்கள் பிரிவு தலைவரான ஜாய்ஸ் கிங்ஸ்லி.
ஆண், பெண் பாலின அடையாளங்களுக்கு இடையிலான வருமான ஏற்ற இறக்கம் குறித்து இம்மாதம் 5ஆம் தேதி லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் நேரலை காணொளி, லிஷா பெண்கள் பிரிவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஒளிபரப்பானது. சிறப்பு விருந்தினராக மீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியர் ரசிகர்கள் பிரிவின் தலைவரான சபானித்தா சண்முகசுந்தரம் இடம்பெற்றார்.
‘டயாஜியோ’ (Diageo) நிறுவனத்தில் அனைத்துலக ரீதியில் ‘பிராண்ட் மேனேஜராகப்’ பணியாற்றும் ஜெயசுதா சமுத்திரன் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் பெண்கள் பிரிவு (SHE@SICCI) தலைவர் ஷோபா செரிங் பாலா, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் பெண்கள் பிரிவு (DEWI@SMCCI) குழு உறுப்பினர் ஹூடா ஹாமிட், சிங்கப்பூரின் அனைத்துலக வர்த்தக, தொழில் பெண்கள் சம்மேளனத் தலைவர் ஆனி சான் ஆகியோர் கலந்துரையாடல் குழுவில் இடம்பெற்றனர்.
பெண்கள் முன்னேற்றம் குறித்து பல அம்சங்கள் இருந்தாலும் குறிப்பாக வருமான வேறுபாட்டைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்து அதை உன்னிப்பாக ஆராய ஏற்பாட்டு குழு முடிவெடுத்தது என்று குறிப்பிட்டார் ஜோயிஸ். சமூகத்தின் பலவித பிரிவுகளில் முத்திரை பதித்து வரும் பெண்களைக் கலந்துரையாடலில் உள்ளடக்கும் நோக்கத்தில் குழு பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார் அவர். சிங்கப்பூரில் பாலின அடிப்படையில் வருமான வேறுபாடு இருந்தாலும் அது பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றும் பாலின அடையாளத்தைவிட ஓர் ஊழியரது திறன்களின் முக்கியத்துவத்தைச் சமூகம் அறிந்து வருகிறது என்றும் சொன்னார் ஹூடா.
பெண்களைவிட ஆண்கள் அதிகமாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களும் வேலைகளும் நியாயப்படுத்தக்கூடியதா என்று ஜெயசுதா கேட்ட கேள்விக்கு ஷோபா, “உடல் சார்ந்த பலத்தால் ஒரு சில துறைகளில் பெண்களைவிட ஆண்கள் கூடுதல் ஆற்றலுடன் பணிபுரியக்கூடும். அதை முற்றிலும் நிராகரிக்க முடியாது,” என்றார்.
இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ள இக்காலகட்டத்தில் அறிவாற்றலும் சிந்தனைத் திறனும் முதன்மையாகத் தேவைப்படும் பல துறைகளில் வருமான வேறுபாட்டிற்கு அவசியம் இல்லை என்பதை வலியுறுத்தினார் அவர்.