மரம் நடுவதற்கென சிங்கப்பூரில் ஒரு தினம் அனுசரிக்கப்படுகிறது. பூங்கா நகர் திட்டத்தின்கீழ் 1971ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று முதன்முதலில் இந்த தினம் அனுசரிக்கப்படத் தொடங்கியது. இதுபோன்ற தகவல்களைப் பகிரும் வகையில் 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் வரலாற்றைக் கூறும் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.
புத்தகங்கள், வரைப்படங்கள், விளக்கப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் என 150க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பொதுமக்கள் இலவசமாக இக்கண்காட்சியில் காணலாம்.
தேசிய நூலகத்தில் அமைந்திருக்கும் ‘மனிதன் x இயற்கை : சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் வரலாற்று’ கண்காட்சி செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறும்.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைச் சித்திரிக்கும் வண்ணம் ஆவணங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு சில ஆவணங்கள் முதல்முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன என்று கூறினார் தேசிய நூலக வாரியத்தின் மூத்த நூலக அதிகாரி (அரும்பொருள்கள்) திருமதி மகேஸ்வரி பெரியசாமி, 51.
“இதுவரை நடைபெற்ற கண்காட்சிகள் பெரும்பாலும் தேசிய நூலகத்தின் ஆவணங்களைக் கொண்டிருந்தன. ஆனால் இந்த கண்காட்சி, பல்லுயிர்களை மையமாகக் கொண்டிருப்பதால் லீ கொங் சியன் இயற்கை வரலாற்று அரும்பொருளகம் போன்ற பல அமைப்புகளிடமிருந்து இரவல் பெற்றுக்கொண்ட பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இதுவே இந்தக் கண்காட்சியின் சிறப்பு அம்சம்,” என்றார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகத்தில் பணியாற்றும் திருமதி மகேஸ்வரி.
சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம், சிங்கப்பூர் பூமலை ஆகிய அமைப்புகளின் இணை ஆதரவில் கண்காட்சி வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் சிங்கப்பூரின் நிலத்தோற்றம், சிங்கப்பூர் இந்தியர்களின் ஆரம்பகால வரலாறு ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கு இக்கண்காட்சி பேருதவியாக இருக்கும் என்றார் சிங்கப்பூர் ஊர்வன விலங்கு சங்கத்தின் இணை நிறுவனர் திரு சங்கர் அனந்தநாராயணன், 26.
“இளையர்கள் கண்டிப்பாக பயனடைவார்கள். நானே கல்வித் துறையில் பணியாற்றுவதால் நிச்சயமாக என் மாணவர்களைக் கண்காட்சிக்கு அழைத்து வருவேன். அறியாமையில் இருக்கக்கூடாது. இதுபோன்ற தகவல்களை அறிந்திருக்கவேண்டும்.
“சிங்கப்பூரை ஒரு நகரப் பகுதியாகத்தான் பலரும் அறிந்திருப்பர். ஆனால் நகரம் ஆவதற்கு முன்னர் என்ன இருந்தது என்பது குறித்து அறியாமையே உள்ளது. இதனால்தான் இயற்கையுடன் நமது தொடர்பு முறிந்திருக்கிறது. அதனால்தான் வன உயிரினங்களுடன் மனிதர்கள் ஒத்துவாழ்வதில் சிக்கல் ஏற்படுகிறது,” என்று விளக்கினார் சங்கர்.
‘இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்’, ‘இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல்’, ‘இயற்கையை மாற்றியமைத்தல்’ என்று மூன்று பிரிவுகளாகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நூலகக் கட்டடத்தின் பத்தாவது மாடி காட்சிக்கூடத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.