கி. ஜனார்த்தனன்
தமிழ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் யுவராஜ் துரியதாசு. உடலுறுதி ஆர்வலரான இவர், டெப்ரா தயானி நானயகர எனும் சிங்கள பௌத்த குடும்பத்துப் பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மணமுடித்தார்.
இவர்கள் இல்லறத்தின் பரிசாய் மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தில் இணைந்த புதுவரவு பெண் குழந்தை ரக்ஷ்யா.
திருமணமும் பிள்ளைப்பேறும் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற்றதால், முதன்முதல் ரக்ஷ்யாவுடன் ஆலயத்துக்குச் சென்று கொண்டாடும் இந்த விசாக தினம் இவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
செயின்ட் மைக்கல்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கராமயா பௌத்த ஆலயத்திற்குச் சென்று தலைமை பிக்கு கையால் மகள் ரக்ஷ்யாவிற்கு காப்புக் கயிறு கட்டுவது இவர்கள் திட்டம்.
கூட்டு வழிபாடு, பின்னர் பக்தர்கள் வீட்டில் சமைத்துக் கொண்டுவரும் பலகாரங்களைப் பகிர்ந்துகொள்தல் போன்றவற்றை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக இவர்கள் கூறினர்.
திருமணமும் புதுமனை புகுவிழாவும் இந்து, பௌத்த முறைகளின்படி நடந்ததால் தம்பதி தங்கள் வாழ்க்கைத்துணையின் சமய நடைமுறைகள் குறித்து புரிந்துகொள்ள அது வழிவகுத்தது. புதிய இல்லத்தை ஆசீர்வதிக்க வந்த பௌத்த துறவிகளுக்கு மரியாதை செய்தது புதிய அனுபவம் என்று சொன்ன யுவராஜ், பௌத்த நடைமுறைகள் பொருள் பொதிந்தவை என்றும் பௌத்த சமயக் கொண்டாட்டங்களில் நிறைந்திருக்கும் அமைதியும் எளிமையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார்.
தொடர்புத் துறை நிபுணராகப் பணியாற்றும் திருமதி தயானி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்.
தாயார் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சீனர் என்றபோதும் தந்தைவழி தாத்தா, பாட்டி, உறவினர்கள் வழிகாட்டலில் சிங்கள மரபுடன் வளர்ந்ததாகக் கூறிய தயானி, இந்து சமயத்தைப் பற்றித் தன் கணவரிடம் மேலும் தெரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
மொழியாலும் சமயத்தாலும் வேறுபட்டாலும் விட்டுக்கொடுத்தலே இல்லறத்தின் அடிநாதம் என்பது இந்தத் தம்பதியின் நம்பிக்கை.
திருமணத்தின்போது தனது ஆசைகள் சிலவற்றைக் கணவன் குடும்பத்தினரின் நம்பிக்கைகளுக்காக விட்டுக்கொடுத்தார் தயானி.
முக்கிய பௌத்த பண்டிகை நாள்களில் அன்பு மனைவிக்காக சைவ உணவை மட்டுமே உட்கொள்கிறார் யுவராஜ்.
சிங்களப் பண்பாட்டையும் மதித்து நடக்கும் மாமியார் கஸ்தூரிபாய் ராமு, தமிழ்த் திரைப்படங்களையும் பாடல்களையும் அறிமுகப்படுத்தும் நாத்தனார் ஷாலினி, ரக்ஷ்யா வளர்ந்ததும் ஞாயிற்றுக்கிழமை களில் நடைபெறும் சிங்கள பௌத்தர்களுக்கான சமய வகுப்பில் சேர மனதார சம்மதிக்கும் கணவன் என அன்புவாழும் கூடாக விளங்குகிறது தனது வீடு என்கிறார் தயானி.
எல்லா சமயங்களுமே மனிதர்களை நன்னெறிப்படுத்தும் கருவிகளே; அவற்றின் உள்ளர்த்தத்தைப் புரிந்து மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார் யுவராஜ்.