தங்களுடைய கவனிப்பில் நீண்டகாலம் இருந்த வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்புவது பெரும் மனவேதனையை ஏற்படுத்தும்.
ஆனாலும், தங்களோடு இருந்தவரை அப்பிள்ளைக்கு முடிந்தளவு அன்பும் அரவணைப்பும் வழங்குவதில் கிடைக்கும் மனநிறைவு அவ்வேதனையையும் பிரிவையும் ஓரளவு போக்கி விடுகிறது என்பதை திருவாட்டி லோர்ட்ஸ் தாமஸ் ஆட்ரி, 54, அவருடைய கணவர் திரு ராஜிவ் வேலாயுதம், 56, பகிர்ந்தனர்.
2004ல் வளர்ப்புப் பெற்றோர் பயணத்தைத் தொடங்கிய இருவரும் தங்களுடைய முதல் வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பு இல்லத்துக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சோகமடைந்தனர்.
அதற்குப் பிறகு, வளர்ப்புப் பெற்றோர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியபோது அவர்களுடைய மகன் ராஜீவ் ஜெரில் தினேஷனுக்கு ஆறு வயது.
“அரவணைப்பும் தங்குவதற்கு வீடும் தேவைப்படும் இன்னும் பல குழந்தைகள் உள்ளனர்,” என்று கூறியது அவர்களுடைய பயணத்தைத் தொடர ஊக்குவித்தது.
இந்த ஊக்கமே அவர்களை இன்று வரை 18 முதல் 19 பிள்ளைகளை வளர்க்க காரணமாயிற்று. அவர்களுள் ரோஹனும் (உண்மையான பெயர் அல்ல) ஒருவர்.
தன்னுடைய முதல் மகனைப் புறக்கணித்துவிடும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டதால், அத்தம்பதியின் நண்பர்களும் குடுமத்தாரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனாலும், அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் கைப்பிள்ளையாக இருந்த ரோஹனை எடுத்து வளர்த்தார்கள்.
நவம்பர் 18ஆம் தேதி என்டியுசி வணிக மையம், ‘ஒன் மரினா பொலிவார்ட்’டில் நடந்த வளர்ப்புப் பிள்ளைகள் மற்றும் இளையர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ரோஹன் தலைசிறந்த சாதனை விருது பெற்றார்.
ஆண்டு தொடக்கத்தில் பல சவால்களை எதிர்கொண்ட ரோஹன், விடாமுயற்சியாலும் வளர்ப்புப் பெற்றோரின் ஆதரவாலும் கல்வியில் சிறந்து விளங்கினார்.
தான் மட்டும் முன்னேற்றம் அடைவதில் குறியாக இருக்காமல், தன் நண்பர்களும் முன்னேற்றம் அடைய அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்.
ரோஹன் போன்ற வளர்ப்புப் பிள்ளையின் இந்த வெற்றி, வளர்ப்புப் பிள்ளைகளைத் தாழ்வாகக் கருதும் சிலரின் மனப்போக்கை மாற்றுகிறது என திருவாட்டி ஆட்ரி நம்புகிறார்.
வளர்ப்புப் பிள்ளைகளின் பள்ளி ஆசிரியர்களோடு உரையாடி பிள்ளையின் கல்விப் பயணத்தில் ஈடுபடுவது போன்ற வழிகளில் ஆதரவு கொடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், ஒரு வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பதற்குத் திறந்த மனம் இருப்பது முக்கியம். அப்பிள்ளை வளர்ப்புப் பெற்றோரின் வீட்டிற்கு முதன்முதலாக குடியேறும்பொது, அவர்களுக்குத் தயக்கமாக இருப்பது இயல்பே.
தயக்கத்தைப் போக்கி, பிள்ளையை நலமாகவும் துன்பம் இல்லாமலும் பார்த்துக்கொள்வது வளர்ப்புப் பெற்றோரின் தலையாய பொறுப்பு என்றார் அவர்.
மிக முக்கியமாக, அப்பிள்ளையைக் குடும்பத்தில் ஒருவராகவும் ஏற்று நடப்பது அவசியம் என்றார் திருவாட்டி ஆட்ரி. இவ்வாறு, தாங்கள் இப்பண்புகளைக் கொண்டுள்ளதால் அவர்களுக்கும் ரோஹனுக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளதை அவர் சுட்டினார்.
“நான் அவனுடைய வளர்ப்புத் தாய் மட்டும்தான். ஆனாலும், என்னை அவனுடைய சொந்த தாயாக எண்ணி, என்னுடன் நெருக்கமான உறவை அவன் கொண்டுள்ளான். இதுவே எனக்குப் பெரிய மன நிறைவைத் தருகிறது,” என்று சொன்ன திருவாட்டி ஆட்ரி, எத்தனை பிள்ளைகள் வந்து சென்றாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தமது மனதில் ஆழ்ந்த இடத்தைப் பிடித்துள்ளதாகச் சொன்னார்.
அவர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் குறையாது என்றார் அவர்.