தென்கொரியாவில் வேகமாகப் பரவும் கொவிட்-19; எண்ணிக்கை 433 ஆனது
தென்கொரியாவில் கொவிட்-19 கிருமி வேகமாகப் பரவி வருகிறது. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அந்த எண்ணிக்கை 433 ஆக இருந்தது.
புதிதாக 142 பேரிடம் கொவிட்-19 கிருமி காணப்பட்டதாக நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் கூறிய கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் மேலும் 87 பேர் பாதிக்கப்பட்டதாக பிற்பகலில் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை 204 பேர் மட்டுமே கிருமி தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை இருமடங்கிற்கும் மேல் அதிகமானது. சீனாவுக்கு வெளியே ஆக அதிகமானவர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருப்பது தென்கொரியாவில்தான்.
டெயகு நகரில் உள்ள ஒரு தேவாலயத்தின் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 61 வயது மாது கிருமித் தொற்றுக்கு ஆளானார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 150க்கும் மேற்பட்டவர்களிடம் கிருமித்தொற்று காணப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இன்று பதிவு செய்யப்பட்ட புதிய நோயாளிகளில் சிலரும் பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
ஷின்சியோன்ஜி என்னும் அந்த தேவாலயத்தின் 9,300 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். அவர்களில் 544 பேரிடம் கிருமித் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
சியோங்டோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதாகவும் புதிதாக நேற்று அறிவிக்கப்பட்டவர்களில் 92 பேர் அந்த நோயாளிகளோடு தொடர்புகொண்டவர்கள் எனவும் கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் கூறியது.
இதற்கிடையே, கிருமித் தொற்றுக்கான சிகிச்சை பலனளிக்காமல் இன்று ஒருவர் மாண்டார். அதனைத் தொடர்ந்து கிருமித் தொற்று மரண எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இவ்விருவரும் சியோங்டோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
#தென்கொரியா #கொரோனா #கொவிட்-19 #தமிழ்முரசு