ஈரானில் கொரோனாவுக்கு 43 பேர் பலி; அமெரிக்கா உதவத் தயார்
கொரோனா கிருமி பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் ஈரான் கேட்டுக்கொண்டால் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வாஷிங்டன் அருகே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “ஈரான் மக்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் உதவி தேவை என அமெரிக்காவை ஈரான் நாட வேண்டும். அவ்வாறு கேட்டால் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்களை அனுப்பி வைப்போம்,” என்றார்.
சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா கிருமி மரணம் ஈரானில் பதிவாகி வருகிறது. சனிக்கிழமை வரை அங்கு 43 பேர் உயிரிழந்துவிட்டனர். 24 மணி நேரத்தில் ஒன்பது பேர் மாண்டதால் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 593 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என ஈரான் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.