சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று
சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 26) உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 28 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
அந்த 28 பேரில் இருவரைத் தவிர்த்து, எஞ்சிய அனைவரும் சிங்கப்பூர்வாசிகள் அல்லது நீண்டகால வருகை அட்டை வைத்திருப்பவர்கள். அவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு அல்லது ஆசியாவின் இதர பகுதிகளுக்குச் சென்றவர்கள்.
கிருமித்தொற்று கண்டவர்களின் எஞ்சிய 24 பேருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.
அவர்களில் இருவர், ஃபெங்ஷான் பகுதியில் புதிய கிருமித்தொற்று இடமாக கண்டறியப்பட்டுள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியுடன் தொடர்புடையவர்கள். மற்றொருவர், ‘டோவர் கோர்ட் இன்டர்நேஷனல்’ பள்ளியுடன் தொடர்புடையவர்.
இதுவரை மொத்தம் 20 பேர் ஃபெங்ஷான் பாலர் பள்ளியுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் 15 பேர் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள். எஞ்சிய ஐவர், அந்தப் பாலர் பள்ளி முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள்.
இதற்கிடையே, புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், தேசிய தோல் நிலையத்தில் பணிபுரியும் 32 வயது மருத்துவர் ஒருவரும் அடங்குவார். அவர் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. நேற்று முன்தினம் (மார்ச் 24) அவருக்கு அறிகுறிகள் தென்பட்டன. அதற்கு முன்னதாக அவர் வேலையில் இருந்தார்.
இந்நிலையில், புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களில் 14 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லை. அவர்களின் தொடர்புகளைக் கண்டறியும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருகிறது.
கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமைடைந்துள்ள மேலும் 12 பேர் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை மொத்தம் 172 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 404 பேரில் 18 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.