பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கிருமித்தொற்றால் உயிரிழப்பு
பிறந்து ஆறு வாரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் ஆளுநர் இந்தத் தகவலை நேற்று (ஏப்ரல் 1) தெரிவித்தார். கிருமித்தொற்றுக்கு பலியான குறைந்த வயதுடையவர்களில் இந்தக் குழந்தையும் ஒருவர் என்றார் அவர்.
கடந்த வார இறுதியில் மயக்கமுற்ற நிலையில் அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அதனை உயிர்பிழைக்க் வைக்க முடியவில்லை என்றும் ஆளுநர் நெட் லேமன்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
“நேற்று இரவுதான் பரிசோதனை முடிவுகள் வந்தன. அந்தில் அந்தக் குழந்தைக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“இதயத்தை நொறுக்குவதாக இது உள்ளது. வலுவற்றவர்களைச் சிறிதும் கருணையின்றி இது தாக்குகிறது ,” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
கடந்த வாரம் இலினாய்சில் ஒரு வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தது.
அமெரிக்காவில் 4,475க்கு மேற்பட்டோரைப் பலிவாங்கிய இந்த கிருமித்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வயதானவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் வெகுவாகத் தாக்கி வருகிறது.
கனெக்டிகட் உடனனான நியூயார்க் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் கொவிட்-19 தாக்கம் அதிகம் இருப்பதாகவும் சுமார் 2,000 பேர் அந்தப் பகுதியில் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் முக்கியத் தேவைகளைத் தவிர மற்ற நேரங்களில் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள மில்லியன் கணக்கான அமெரிக்கர்களில் நியூயார்க், கனெக்டிகட், நியூ ஜெர்சி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.