சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 21வது நபர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 21வது நபர் உயிரிழந்ததை சுகாதார அமைச்சு நேற்றிரவு (மே 11) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
68 வயதான அந்த சிங்கப்பூரருக்கு உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் கொவிட்-19 தொடர்பான நெருக்கடிகளால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை உயிரிழந்த 53 வயது இந்திய நாட்டவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டது.
இதயநாடிக் குருதியுறைவு (coronary thrombosis) காரணமாக இதயத்திசு இறப்பு (myocardial infarction) அவரது மரணத்துக்குக் காரணமானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கொவிட்-19 நோய்த்தொற்றுகண்ட, ஆனால் கொவிட்-19 அல்லாத வேறு காரணங்களால் இங்கு உயிரிழந்த ஏழாவது நபர் இவர்.
சிகிச்சையளிக்கும் மருத்துவர், ஒருவர் இறந்ததற்கான முதன்மை காரணமாக கிருமித்தொற்றை குறிப்பிட்டால்தான் அது கொவிட்-19ஆல் ஏற்பட்ட மரணமாகக் கருதப்படும் என்றும் அனைத்துலக அளவிலான நடைமுறைகள் இவ்வாறு இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. 2018ஆம் ஆண்டு 25 முதல் 59 வயதுக்குட்பட்ட 86 வெளிநாட்டு ஊழியர்கள் (ஆட்வர்) இதயம்சார்ந்த நோய்களால் உயிரிழந்ததையும் அது சுட்டிக்காட்டியது.
கடந்த சில நாட்களைப் போலல்லாது நேற்று 486 பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. கிருமித்தொற்றைக் கண்டறியும் கருவி ஒன்றின் துல்லியத் தன்மை சரிபார்க்கப்பட வேண்டி இருந்ததால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்.
நேற்று புதிதாக மூன்று கிருமித்தொற்று குழுமங்கள் உறுதி செய்யப்பட்டன. துவாஸ் சவுத் அபார்ட்மென்ட்ஸ், 47 செனோக்கோ டிரைவ், 566 உட்லண்ட்ஸ் ரோடு ஆகியவற்றில் அந்தக் குழுமங்கள் கண்டறியப்பட்டன.
புதிதாக கண்டறியப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் ஒரு சிங்கப்பூரர், ஒரு நிரந்தரவாசி, ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்காத வெளிநாட்டு ஊழியர் இருவர், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 481 ஊழியர்கள் ஆகியோர் தொடர்பிலானது.
நேற்று முன்தினம் புதிய கிருமித்தொற்று சம்பவம் கண்டறியப்படாத பொங்கோல் எஸ்11 விடுதியில் நேற்று நால்வருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையும் சேர்த்து அந்த விடுதியில் நேற்றைய நிலவரப்படி 2,543 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி மொத்தம் 3,218 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா கிருமியால் 4.17 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 284,000 பேர் உயிரிழந்தனர்.