2021ல் முன்னோடித் திட்டம்: வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்துக்குத் திரும்ப அனுமதி
சில தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ், மாதம் ஒரு முறை சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
வழக்கமான பரிசோதனை, தொடர்பறியும் சாதனங்களை வைத்திருப்பது, பாதுகாப்பான வாழ்க்கைப் பாணி நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்த ஊழியர்கள் இணங்கி நடப்பதைப் பொறுத்தே இது இருக்கும் என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் இன்று (டிசம்பர் 14) தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 அமைச்சுகள்நிலை சிறப்புப் பணிக்குழு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
தங்கும் விடுதிகளில் வசிக்கின்ற, கட்டுமான இடங்களில், கடல் மற்றும் உணவு பதனீட்டு துறைகளில் வேலை பார்க்கின்ற 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குத் தொடர்பறியும் சாதனங்கள் இம்மாத முடிவில் விநியோகிக்கப்பட்டுவிடும்.
இதையடுத்து இந்த முன்னோடி திட்டம் நடப்புக்கு வருகிறது. சிங்கப்பூர் டிசம்பர் 28ல் மூன்றாம் கட்ட தளர்வைத் தொடங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து இந்த முன்னோடித் திட்டம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.