புதிய விருந்தினர்களைப் பெற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்தியுள்ள மாண்டரின் ஆர்ச்சர்ட்
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவும் ஒன்று.வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் தங்கிய சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.பாதிப்படைந்த 13 பேருக்கு நோய் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய சுகாதார அமைச்சு விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய விருந்தினர்களைப் பெற்றுக்கொள்வதை மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டல் உடனடியாக நிறுத்தியுள்ளது. வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் தற்போது அங்கு தங்குவோர் உடனடியாக வேறோர் இடத்துக்கு மாற்றப்படுவர்.
வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு விதிக்கப்பட்டோர் தங்கும் இடமாகச் செயல்படுவதற்கு மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் இம்மாத இறுதியுடன் முடிகிறது. தற்போது அங்கு தங்கும் விருந்தினர்களுக்குப் படிப்படியாக மருத்துவப் பரிசோதனை நடத்த ஹோட்டல் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அங்கிருக்கும் உணவகமும் நிகழ்ச்சிகள் நடத்தும் அறை களும் மூடப்படும். வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவின்கீழ் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் தங்கிய அந்த 13 பேரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.அவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் 2ஆம் தேதிக்கும் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
13 பேரும் பஹ்ரேன், கனடா, இந்தோனீசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்தபோதிலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒரே மாதிரி இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியது.
ஒரே ஆளிடமிருந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா கிருமி பரவியிருக்கக்கூடும் என்று தேசிய பொது சுகாதார ஆய்வுக்கூடம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.விசாரித்ததில், பாதிப்படைந்த 13 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதிக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவை மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நிறைவேற்றியது தெரியவந்தது.
ஆரம்பகட்ட விசாரணையில் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த 13 பேருக்கும் மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் கொரோனா கிருமி பரவியிருக்கும் சாத்தியத்தைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது. வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவு விதிக்கப்பட்டோருக்காகவே ஹோட்டல்களில் தனியொரு பகுதி, மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால் மற்ற விருந்தினர்களுடன் அவர்கள் தொடர்பில் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.