மலேசியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்பட்டன
மலேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர்களில் 9 பேருக்கு, தடுப்பூசி போட்டு, இரு வாரங்களுக்குப் பிறகு தொற்று ஏற்பட்டதாகவும் 31 பேருக்கு தடுப்பூசி போட்ட இரு வாரங்களுக்குள்ளாக தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்ட 142 சுகாதாரப் பணியாளர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவது, இறப்பு நிகழ்வது போன்றவற்றிலிருந்து இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பிறகே அதிகபட்ச நோயெதிர்ப்பு சக்தி படிப்படியாக உருவாகும் என்று குறிப்பிட்ட டாக்டர் ஹிஷாம், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைவிடக்கூடாது என்றார்.