இலங்கை, நேப்பாளம், பங்ளாதேஷில் தீர்ந்துவிடும் நிலையில் தடுப்பூசிகள்
இலங்கை, நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் போதுமான எண்ணிக்கையில் கொவிட்-19 தடுப்பூசிகள் இல்லாத அபாயநிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்களை வருத்தும் கொள்ளைநோய் அலையைச் சமாளிப்பதற்கான தெற்காசியாவின் முயற்சிகளுக்கு சீனாவும் ரஷ்யாவும் கைகொடுக்க முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
மூன்று நாடுகளிலும் தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேகம் குறைந்துள்ள நிலையில் அவை தடுப்பூசிக்காக அனைத்துலகச் சந்தைகளை நாடிச் செல்கின்றன.
கிட்டத்தட்ட 21 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள இலங்கையில் சுமார் 115,000 தடுப்பூசி அளவுகளே எஞ்சியுள்ளன.
இந்தியாவிடமிருந்து 13.5 மில்லியன் ‘கொவிஷீல்டு’ தடுப்பூசி அளவுகளை இலங்கை வாங்குவதாக இருந்த நிலையில், இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி தடை காரணமாக அதன் அன்றாட தடுப்பூசி எண்ணிக்கையைக் குறைத்துள்ளது.
நேப்பாளத்தில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் தங்களின் இரண்டாவது ‘கொவிஷீல்டு’ தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.
சீனா வழங்கிய ‘சினோஃபார்ம்’ தடுப்பூசியைக் கொண்டே நேப்பாளம் அதன் தடுப்பூசித் திட்டத்தைச் சமாளித்து வருகிறது.
பங்ளாதேஷுக்கும் அதே கதி. இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் ‘கொவிஷீல்டு’ தடுப்பூசி அளவுகள் பெறுவதாக இருந்தது. ஆனால் ஏழு மில்லியனை மட்டுமே அது பெற்றுள்ளது. அதற்கும் இந்தியாவின் ஏற்றுமதித் தடை நடப்புக்கு வந்துவிட்டது.