தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது.
தற்போது நடப்பில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடனும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 22) ஆலோசனை நடத்தினார்.
மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டது.
ஊரடங்கை நீட்டிக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவும் ஆதரவு தெரிவித்தது.
இதனையடுத்து, நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.