சென்னை: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் புதிய கொரோனா கிருமித் தொற்று பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது இருக்கும் நிலையில், அங்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 டன் ஆக்சிஜன் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கோரிக்கை மனு அளித்தார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்குத் தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ ஆக்சிஜன் விநி
யோகம் தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் தமிழக அதிகாரிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பியூஷ் கோயல், டி.ஆர் பாலுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தைக் கண்
காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மத்திய அரசு சார்பில் இணைச் செயலா் ஹூகும் சிங் மீனா, டாக்டர் சஞ்சனா சர்மா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மருத்துவ தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இனி உற்பத்தி செய்யக் கூடிய ஆக்ஸிஜன், தேவைப்படக் கூடிய மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனைப் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.