தமிழகம்: ஊரடங்கு காலத்தில் காய்கறி விலை எகிறியது
தமிழகத்தில் நாளை (மே 24) முதல் ஊரடங்கு தொடர்வதால், தேவையான பொருள்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் காய்கறி, மளிகைக் கடைகளில் இன்று (மே 23) அலைமோதியது.
கடைக்காரர்களில் சிலர் இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், காய்கறிகளின் விலையை இருமடங்கு உயர்த்தினர்.
விலை ஒருபுறமிருக்க, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் காற்றில் பறக்கவிடும் வகையில், பொருள்களை வாங்குவதில் மும்முரம் காட்டினர். இதனால், தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயமும் தென்பட்டது.
காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சில வணிக நிறுவனங்களும் வியாபாரிகளும் காய்கறிகளை தாறுமாறாக கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதுபோல் விலை உயர்த்தி விற்பனை செய்வது மக்களைச் சுரண்டும் செயலாகும். எனவே, காய்கறிகளை வழக்கமான விலைக்கு குறைக்க வணிகர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார்.